கத்தாரில் சுட்டப்பட்ட குமரி மீனவர் உடலை மீட்க நடவடிக்கை.. குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்... ஜெ. உத்தரவு
சென்னை : கத்தார் நாட்டில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது கடற்கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர் குடும்பத்துக்கு ரூ.5 நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது..
கத்தார் நாட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான மீன்பிடி படகில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த கன்னியாகுமரி மாவட்டம், இணையம்புத்தன்துறை மீனவ கிராமத்தினை சேர்ந்த ஆண்ரூஸ் என்பவரின் மகன் அந்தோணி அருள் அனிஷ், 6.8.2015 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்களுடன் பக்ரைன் நாட்டின் கடல் பகுதியில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருக்கும் போது கடற்கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்தி அறிந்து நான் ஆழ்ந்த துயரம் அடைந்தேன்.
இந்த துயர சம்பவத்தில் அகால மரணமடைந்த மீனவர் அந்தோணி அருள்அனிஷ் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மரணமடைந்த அந்தோணி அருள் அனிஷின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரவும், அவர் பணிபுரிந்த நிறுவனத்திடமிருந்து அவரது குடும்பத்திற்கு இறுதி பணப்பயன்களை பெற்று தர இந்திய தூதரகத்தின் மூலமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் பிரதமரை கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளேன்.
இந்தத் துயரச்சம்பவத்தில் உயிரிழந்த மீனவர் அந்தோணி அருள்அனிஷ் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.