வளங்கள் பெருகட்டும்... வெற்றி கிடைக்கட்டும்: ஜெயலலிதா தமிழ் புத்தாண்டு வாழ்த்து
தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும், வாழ்வு செழிக்கட்டும், நலங்கள் தழைக்கட்டும், வளங்கள் பெருகட்டும் வெற்றிகள் தொடரட்டும் என முதல்வர் ஜெயலலிதா தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி:
சித்திரை முதல் நாளான தமிழ்ப் புத்தாண்டு மலருகின்ற இந்தப் பொன்னாளில் என் அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
"ஆதிமனிதன் தமிழன் தான் அவன் மொழிந்தது "செந்தமிழ்தான்"என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைக்கேற்ப, உலகிலேயே தொன்மையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ் மொழியை பேசும் மூத்த குடிமக்களான தமிழ்ப்பெருமக்கள், ஆண்டாண்டு காலமாக சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள்.
வலிமையும், வளமும் மிக்க தமிழகம் வளர்ச்சிப் பாதையில் தொடரவும், அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம், ஊக்கத்தோடு உழைப்போம், புதிய சாதனைகளை படைப்போம் என மலரும் இப்புத்தாண்டில் உறுதியேற்போம்.
இந்த இனிய புத்தாண்டில், தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும், வாழ்வு செழிக்கட்டும், நலங்கள் தழைக்கட்டும், வளங்கள் பெருகட்டும், வெற்றிகள் தொடரட்டும் என வாழ்த்தி, எனதருமை தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நெஞ்சார்ந்த "தமிழ்ப் புத்தாண்டு" நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.