பொறாமை கொள்ளாதீர்... பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்: இது ஜெ.வின் மிலாது நபி வாழ்த்து
சென்னை: மற்றவர்களின் தவறுகளைத் தேடி அலையாதீர்கள், ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள், பசித்தவர்களுக்கு உணவளியுங்கள் என்று நபிகள் நாயகத்தின் போதனைகளை பின்பற்றி வாழவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா மிலாதுன் நபி வாழ்த்து கூறியுள்ளார்.
இஸ்லாமிய சமூகத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:
இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான "மிலாதுன் நபி" திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த "மீலாதுன் நபி" நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல எண்ணம் நடத்தையை பாதுகாக்கும். வயதும் காலமும் வீணாகும் முன் நன்மையான காரியங்களை விரைந்து செய்யுங்கள். மற்றவர்களின் தவறுகளைத் தேடி அலையாதீர்கள், ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள், சகோதரர்களாக வாழுங்கள், பசித்தவர்களுக்கு உணவளியுங்கள் என்று இறைத்தூதர் நபிகள் நாயகம் உலகிற்கு அருளிய போதனைகளை மக்கள் அனைவரும் பின்பற்றி வாழ்ந்தால் வாழ்வில் ஏற்றம் பெறலாம்.
இஸ்லாமியப் பெருமக்களின் நல்வாழ்விற்காக உங்கள் அன்புச் சகோதரியின் அரசு, உலமாக்களின் மாதாந்திர ஓய்வூதியத்தினை 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கியது, புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு அரிசி வழங்கி வருவது, தமிழ்நாடு வக்ப் வாரியத்திற்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியத்தை 1 கோடி ரூபாயாக உயர்த்தியது.
பள்ளி வாசல்கள், தர்காக்கள் போன்ற வக்ப் நிறுவனங்களில் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக 3 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட வக்ஃப் நிறுவன மேம்பாட்டு நிதி, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு வழங்கப்பட்டு வரும் ஆண்டு நிருவாக மானியம் 30 லட்சம் ரூபாயாக உயர்த்தியது.
மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு வழங்கப்படும் இணை மானியத் தொகையை உயர்த்தியது, மசூதிகள் மற்றும் தர்காக்கள் புனரமைத்திட 2 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி, நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தனக்கட்டைகளை வழங்கியது போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதை இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் நன்கு அறிவர்.
ஏழைகளை நேசிப்பது சொர்க்கத்தின் திறவு கோலாகும் என்றுரைத்த இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த இப்பொன்னாளில், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய "மிலாதுன் நபி" நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.