சகல வசதியுடன் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை: முதல்வர் ஜெ. திறந்து வைத்தார்
சென்னை: பேருந்து நிலையங்களில் குழந்தைகளுக்கு பாலூட்ட தாய்மார்களுக்கு தனி அறையை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். தமிழகத்தில் 352 பேருந்து நிலையங்களில் தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாலூட்டும் பெண்கள், பணி மற்றும் பயணம் நிமித்தமாக வெளியே செல்லும்போது, பேருந்து நிலையங்களில் காத்திருக்க வேண்டி உள்ளது. தங்கள் இருப்பிடத்திலிருந்து பணி இடத்திற்கோ அல்லது தாங்கள் செல்ல விரும்பும் இடங்களுக்கும் செல்ல, சில மணி நேரம் தேவைப்படும். எனவே, பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் வேளையில், பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் வகையில், பேருந்து நிலையங்களில், தனி அறைகள் கட்டப்பட்டுள்ளன.
'உலக தாய்ப்பால் ஊட்டும்' வாரமான, ஆகஸ்ட் 1ம் தேதிதுவக்க வேண்டும் என, கடந்த மாதம் முதல்வர் ஜெயலலிதா, அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு உத்தரவிட்டார்.
தாய்மார்களுக்கு தனி அறை
முதல்வரின் உத்தரவினை அடுத்து பேருந்து நிலையங்களில், தனியாக ஒரு அறை தேர்வு செய்து, ஐந்து இருக்கைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை ஆகிய அனைத்து வசதிகளும்செய்யப்பட்டு உள்ளன.
அதிரடியாக தயாரான அறை
இடங்களை நகராட்சி நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்து,பாலூட்டும் பெண்களுக்கான இடங்களை ஆய்வு செய்தனர். இதன் திறப்பு விழா, ஆகஸ்ட் 1ம் தேதி, நடைபெறும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னாள் குடியரசுத்தலைவர் மறைவை முன்னிட்டு ஜூலை 27 முதல் ஒருவாரம் துக்கம் கடைபிடிக்கப்பட்டதால் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது.
துவக்கிவைத்த முதல்வர்
இந்த நிலையில் இன்று தலைமைச் செயலகம் வந்த முதல்வர் ஜெயலலிதா, காணொலி காட்சி மூலம். தமிழகத்தில் 352 பேருந்து நிலையங்களில் தனி அறைகளை திறந்து வைத்தார்.
குட்டீஸ்களுக்கு வசதி
இந்த தனி அறையில் குழந்தைகளுக்கு பாலூட்ட வசதியாக தனி இருக்கைகள், மின்விசிறி, சுடுதண்ணீர், தனிகழிவறை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
லட்டு கொடுத்து வரவேற்பு
இன்றைக்கு தனி அறைகள் திறந்து வைக்கப்பட்ட உடன் செங்கோட்டையில் தாய்மார்களுக்கு லட்டுகள் விநியோகம் செய்யப்பட்டன.
தொந்தரவு இருக்காது
பேருந்துகளில் வசதியின்றி தவித்து வந்த தாய்மார்கள் இனி எந்த வித சங்கடமும், சங்கோஜமும் இன்றி இந்த அறைகளுக்குள் அமர்ந்து பச்சிளம் குழந்தைகளின் பசியாற்றலாம். இந்த வசதி செய்து தரவேண்டும் என்று ஐடியா கொடுத்தவர்களுக்கும், அதை உடனடியாக நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவிற்கும் தாய்மார்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.