சட்டசபையில் ஆவேசமாக பேசிய துரைமுருகனை ஆஃப் செய்து சிரிக்க வைத்த ஜெயலலிதா 'டைமிங்'
சென்னை: சட்டசபையில் ஆவேசமாக பேசிக்கொண்டிருந்த எதிர்க்கட்சி துணை தலைவர் (திமுக) துரைமுருகனை தனது டைமிங் பேச்சால் சிரிக்க வைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
தமிழக சட்டசபை கூட்டம் தற்போது நடந்து வருகிறது. மானிய கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகிறார்கள்.
நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி, பதிலளித்தார். முதல்வர் ஜெயலலிதாவும் பேசினார். தமிழகத்தில் படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா உறுதியளித்தார்.
கருணாநிதி மீது குற்றச்சாட்டு
மேலும், மதுவிலக்கை ரத்து செய்தது திமுக தலைவர் கருணாநிதிதான் என்று முதல்வர் ஜெயலலிதா தனது உரையின்போது, குறிப்பிட்டார்.
துரைமுருகன் கோபம்
இதை கேட்டதும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கோபமடைந்தார். முதல்வர் கூறிய கருத்தை மருத்து பேசுவதற்கு, துரைமுருகன் அனுமதி கோரினார். இதற்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை.
பாயின்ட் ஆப் ஆர்டர்
ஆனால், துரைமுருகன் ஆவேசகமாக பேச ஆரம்பித்தார். மேலும், முதல்வர் கூறியதில் 'பாயின்ட் ஆப் ஆர்டர்' உள்ளது என்று குரல் கொடுத்தார்.
விளக்கம் கேட்கும் விதிமுறை
'பாயின்ட் ஆப் ஆர்டர்' என்றால் ஒரு விஷயத்தில் சந்தேகம் இருக்கும்பட்சத்தில் அவை உறுப்பினர்கள் குறிக்கிட்டு கேள்வி கேட்க பயன்படுத்தும் அவை விதிமுறை சொல்லாகும். உண்மைக்கு புறம்பான ஒரு கருத்தை ஒருவர் அவையில் பேசும்போது, 'பாயின்ட் ஆப் ஆர்டர்' இருப்பதாக எந்த ஒரு உறுப்பினரும் குறுக்கிட்டு சொல்ல முடியும். அவர் விளக்கம் பெற முடியும்.
ஜெயலலிதா பதிலடி
இதை மனதில் வைத்து, துரைமுருகன், முதல்வர் உரையில் 'பாயின்ட் ஆப் ஆர்டர்' இருப்பதாக குறிப்பிட்டார்.
அப்போது முதல்வர் ஜெயலலிதா புன் சிரிப்போடு எழுந்து, நானும் "ஒரு பாயின்ட் ஆப் ஆர்டர் கேட்கிறேன்' என்றார்.
மைக்கை மாற்றி பேசுகிறார்
சபாநாயகர் அனுமதியளித்ததை தொடர்ந்து, ஜெயலலிதா பேசுகையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவரது ஒலிபெருக்கியில் பேசாமல், எதிர்க்கட்சித் தலைவர் (ஸ்டாலின்) ஒலிபெருக்கியில் பேசுகிறார். இது தவறாகும் என்றார்.
அவையில் கலகல
முதல்வர் சொன்ன பிறகுதான், மைக்கை மாற்றி பிடித்து பேசிய, தனது தவறை கவனித்த, துரைமுருகன், சிரித்துவிட்டார். பிற உறுப்பினர்களும் சிரித்ததால் அவை கலகலப்பானது. இதைத் தொடர்ந்து, எதற்கு வம்பு என்று, எதிர்க்கட்சித் தலைவரின் ஒலிபெருக்கியை துரைமுருகன் மடக்கியே வைத்துவிட்டார்.
விதிமுறை
சட்டசபையில் ஒரு உறுப்பினர் கேள்வி எழுப்பும்போது, தனக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கையின் முன்பு நின்றபடிதான் பேச வேண்டும். தனது இருக்கையில் உள்ள மைக்கில்தான் பேச வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், ஸ்டாலின் வெளியே சென்றிருந்த நிலையில், அவரின் மைக்கில் துரைமுருகன் பேசியதைத்தான், ஜெயலலிதா கவனித்து சுட்டி காட்டியது குறிப்பிடத்தக்கது.