பிள்ளைகளை அழைச்சுட்டுப் போங்க! - பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் திடீர் அழைப்பு
சென்னை: சென்னையில் உள்ள பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பிற்பகலுக்குப் பிறகு மாணவ மாணவிகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தன.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் இன்று முதல் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை என நேற்று இரவு தகவல் பரவியது. ஆனால் இது வதந்தி என மறுத்தார் உயர்கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன்.
இதைத் தொடர்ந்து சில தனியார் பள்ளி, கல்லூரிகளைத் தவிர மற்றவை வழக்கம்போல இயங்கின.
ஆனால் பிற்பகலுக்குப் பிறகு முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம் என்றும், எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளி நிர்வாகங்கள் பெற்றோர்களை அழைத்து, பிள்ளைகளை நேரத்துடன் கூட்டிச் செல்லுமாறு பிற்பகலில் கூறின. இதைத் தொடர்ந்து பெற்றோர்கள் பரபரப்புடன் பள்ளிகளுக்குச் சென்று பிள்ளைகளை அழைத்துக் கொண்டனர். கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ மாணவிகளும் பிற்பகலிலேயே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.