பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை... ஆனாலும் சில தனியார் பள்ளிகள் மூடல்!
சென்னை: தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை. வழக்கம்போல பள்ளிகள், கல்லூரிகளுக்கு மாணவர்கள் சென்றனர்.
சென்னை நகரில் உள்ள சில தனியார் பள்ளிகள் மட்டும் இன்று இயங்கவில்லை.
சென்னை அப்பல்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், முதல்வர் உடல்நிலையைக் காரணம் காட்டி இன்று (திங்கள்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக செய்தி பரவியது. காலை வரை பள்ளிகளைத் திறப்பதா இல்லையா என்ற குழப்பம் நிலவிய நிலையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் என அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டன. அதே நேரம் அப்பல்லோ மருத்துவமனையைச் சுற்றியுள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் பிரச்சினைக்குரிய பகுதிகளில் இயங்கும் சில தனியார் பள்ளிகள் மட்டும் இன்று திறக்கப்படவில்லை.