தமிழகத்தில் ரூ 1033 கோடியில் 35 துணை மின் நிலையங்கள்... தொடங்கி வைத்தார் ஜெ!
சென்னை: தமிழ்நாட்டில் ரூ.1033 கோடியே 32 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான 35 துணை மின் நிலையங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மின்பாதையில் ஏற்படுகின்ற மின் இழப்பையும், மின் பராமரிப்பு செலவினங்களையும் குறைத்து, ஒவ்வொரு பகுதிக்கும் தேவைப்படுகின்ற உச்சக்கட்ட மின் தேவையை நிறைவு செய்யும் வகையில் சரியான மின் அழுத்தத்துடன் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்கிட கூடுதல் துணை மின் நிலையங்கள் அமைப்பது அவசியமாகும் என்பதைக் கருத்தில் கொண்டு தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு அமைத்து வருகிறது.
அந்த வகையில், ஈரோடு மாவட்டம் திங்களூரில் 90 கோடியே 79 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 230/110 கி.வோ. துணை மின் நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மேலும், சென்னை - கிண்டியில் 230/110 கி.வோ. வளிமகாப்பு துணை மின் நிலையம்; திருவள்ளூர் மாவட்டம் - திருவேற்காட்டில் 230/110 கி.வோ. கலப்பு வளிமகாப்பு துணை மின் நிலையம்; காஞ்சீபுரம் மாவட்டம் - ஆலந்தூரில் 230/11033 கி.வோ. வளிமகாப்பு துணை மின் நிலையம்; கிருஷ்ணகிரி மாவட்டம் - நாரிகாணபுரத்தில் 110/33/11 கி.வோ. துணை மின் நிலையம்; நாகப்பட்டினம் மாவட்டம் - நீடூர், காஞ்சீபுரம் மாவட்டம் - பொத்தேரி, மதுராந்தகம், கே.ஜி.கண்டிகை மற்றும் மாம்பாக்கம், திருப்பூர் மாவட்டம் - காளிவேலம்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் - ஸ்ரீமூலக்கரை ஆகிய இடங்களில் 110/33 கி.வோ. துணை மின் நிலையங்கள்; ஆகியவற்றையும் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
ரூ.1033 கோடி
கோயம்புத்தூர் மாவட்டம் - பசூர், எல்லப்பாளையம் மற்றும் பவானி கதவணை, சேலம் மாவட்டம் - தொப்பூர், சிவகங்கை மாவட்டம் - மறவமங்கலம், தேனி மாவட்டம் - கண்டமனூர்விளக்கு, திண்டுக்கல் மாவட்டம் - நிலக்கோட்டை ஆகிய இடங்களில் 110/22 கி.வோ. துணை மின் நிலையங்கள்; காஞ்சீபுரம் மாவட்டம் - வல்லம் வடகால் மற்றும் நல்லம்பாக்கம், மதுரை மாவட்டம் - ஒத்தக்கடை, விருதுநகர் மாவட்டம் - அனுப்பங்குளம் ஆகிய இடங்களில் 110/11 கி.வோ. துணை மின் நிலையங்கள்; திருவண்ணாமலை மாவட்டம் - பல்லி, கடலூர் மாவட்டம் - ராஜேந்திரபட்டினம், தஞ்சாவூர் மாவட்டம் - அலத்தூர், காஞ்சீபுரம் மாவட்டம் - வையாவூர், கன்னியாகுமரி மாவட்டம் - வடசேரி, மதுரை மாவட்டம் - பேரையூர், விருதுநகர் மாவட்டம் - விருதுநகர், வேலூர் மாவட்டம் - திருப்பத்தூர், அரக்கோணம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வளாகம் மற்றும் திம்மாம்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம் - சின்னகொத்தூர் மற்றும் தளி ஆகிய இடங்களில் 33/11 கி.வோ. துணை மின் நிலையங்கள் என மொத்தம் 1033 கோடியே 32 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 35 துணை மின் நிலையங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் (பொறுப்பு) என்.எஸ்.பழனியப்பன், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எம்.சாய்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.