109 புதிய பஸ்கள், 46 ஸ்மால் பஸ் சேவைகள்: ஜெ. தொடக்கம்
சென்னை: தலைமைச் செயலகத்தில், 29 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பிலான 109 புதிய பேருந்துகள் மற்றும் 40 புதிய ஸ்மால் பஸ்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் 9 பேருந்துகள், சென்னை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 12 குளிர்சாதன பேருந்துகள், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 41 பேருந்துகள், சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 14 பேருந்துகள், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 25 பேருந்துகள், மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 6 பேருந்துகள், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 2 பேருந்துகள் மற்றும் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் 13 வழித்தடங்களில் 40 சிற்றுந்துகள், என மொத்தம் ரூ.29 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டிலான 109 புதிய பேருந்துகள் மற்றும் 40 புதிய சிற்றுந்துகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
மேலும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் வேலூர் மண்டலத்தில் 96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சோளிங்கர் பணிமனை, காஞ்சிபுரம் மண்டலத்தில் 95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓரிக்கை-ஐஐ பணிமனை, கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் புதுக்கோட்டை மண்டலத்தில் 99 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இலுப்பூர் பணிமனை, என மொத்தம் ரூ.2 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 பணிமனைகளை முதல்வர் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் உள்பட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.