முதல்வர் எங்களை மனசார வாழ்த்தினார்!- நாசர்
சென்னை: நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை முதல்வர் ஜெயலலிதா மனதார வாழ்த்தியதாக நடிகர் நாசர் தெரிவித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த மாதம் 18-ந் தேதி தேர்தல் நடந்தது. புதிய தலைவராக நாசர் தேர்ந்தெடுக்கப்பட்டார். விஷால் பொதுச்செயலாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் இருவரும் துணைத்தலைவர்களாகவும், கார்த்தி பொருளாளராகவும், 24 பேர் செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள் அனைவரும் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெறவும், நடிகர் சங்க தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற உதவிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கவும் அனுமதி கேட்டிருந்தார்கள். அவர்களை சந்தித்துப்பேச முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் வழங்கினார்.
அதன்படி, நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் நேற்று காலை 11 மணிக்கு முதல்வரை நடிகர் சங்கத்தினர் சந்தித்தனர். அவருக்கு தங்கள் நன்றிகளைத் தெரிவித்தனர்.
நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் அறிமுகம் செய்து வைத்தார். புதிய நிர்வாகிகள் அனைவரும் முதல்வரிடம் வாழ்த்துப் பெற்றார்கள்.
இதுகுறித்து நாசர் கூறுகையில், "முதல்வர் எங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். எங்களுக்கு மனதார வாழ்த்து சொன்னார். 'தென்னிந்திய நடிகர் சங்கத்தில், ‘நடிகர் திலகம்' சிவாஜிகணேசன், மேஜர் சுந்தரராஜன் நிர்வாகத்தில் இருந்த பொற்காலத்தை இந்த புதிய நிர்வாகம் மீண்டும் கொண்டு வர வேண்டும். அதை இந்த புதிய நிர்வாகம் செய்யும் என்று நம்பிக்கை இருக்கிறது. நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காக எந்த உதவியை கேட்டாலும் அரசு செய்யும்,' என்றார்.
அப்போது, நடிகர் சங்கத்தின் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் அம்மா கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று விஷால் வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை முதல்வர் புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டு, நிச்சயம் வருவதாகக் கூறினார்," என்றார்.