குடிசைகளுக்கு இலவச சிஎப்எல் பல்பு .. கொடநாட்டிலிருந்து 'ஆன்' செய்தார் ஜெ.
சென்னை: தமிழகம் முழுவதிலும் குடிசைகளுக்கு இலவசமாக சிஎப்எல் பல்புகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா, கொடநாட்டிலிருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
இதுதவிர தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையங்கள், சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள சூரியசக்தி மின் நிலையம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் மின் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு பகுதியே இந்த சிஎப்எல் பல்பு வழங்கும் திட்டமாகும்.
மின்பற்றாக்குறை
தமிழகத்தில் மின் பற்றாக்குறையை தீர்க்கவும் மின் விநியோகத்தை சீரமைக்கவும் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக பல புதிய திட்டங்களை மின் வாரியம் மேற்கொண்டுள்ளது.
8 துணை மின் நிலையங்கள்
மின்னழுத்தப் பிரச்சினை, புதிய மின் நிலையங்களில் இருந்து மின்சாரத்தை எளிதாக கொண்டு வருதல் மற்றும் காற்றாலை மின்சாரம் வீணாகாமல் மின் வாரிய மின்தொகுப்பில் இணைத்தல் போன்றவற்றுக்காக கயத்தார், கானார்பட்டி, ஒட்டியம்பாக்கம், சென்னை கொரட்டூர், தப்பக்குண்டு, காரமடை உள்பட 8 இடங்களில் துணை மின் நிலையங்களை மின் வாரியம் அமைத்து வருகிறது.
வீடியோ கான்பரன்சிங் மூலம்
இவற்றில், கட்டுமானப் பணிகள் முடிந்த துணை மின் நிலையங்கள் இன்று திறக்கப்பட்டன. கொடநாட்டில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் ஜெயலலிதா அவற்றை திறந்து வைத்தார்.
மின் சிக்கனம்
மேலும் மின் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் இலவச மின்சாரம் பெறும் ஏழைகளின் குடிசைகளுக்கு 9 வாட்ஸ் மற்றும் 11 வாட்ஸ் திறனில் சி.எப்.எல். பல்புகள் வழங்கப்பட உள்ளன.
14.59 லட்சம் குடிசைகளுக்கு
இந்தத் திட்டத்தையும் முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். மொத்தம் 14.59 லட்சம் குடிசைகளுக்கு இந்த பல்புகள் வழங்கப்படுகின்றன.
சூரிய சக்தி மின் நிலையம்
மேலும், சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 60 கிலோவாட் சூரியமின் சக்தி நிலையத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.
ஒரு மணி நேரத்திற்கு 60,000 யூனிட் மின்சாரம்
இந்த மின் நிலையத்தில் ஒரு மணி நேரத்துக்கு 60 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என தமிழக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.