முதல்வரின் கோப லிஸ்டில் ஜார்ஜ் ஐ.பி.எஸ்... திடீர் டிரான்ஸ்பருக்கு இதுதான் காரணமாமே?
சென்னை: ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவியில் இருப்பவர்கள் அடிக்கடி டிரான்ஸ்பர் செய்யப்படுவது வாடிக்கையான விசயம்தான். டம்மி பதவியில் இருப்பவர்கள் திடீரென்று உச்ச பதவிக்கு போவதும், பரமசிவன் கழுத்து பாம்பாக இருந்த அதிகாரிகள் கூட திடீரென்று டம்மி பதவிக்கு தூக்கியடிக்கப்படுவதும் அரசியல்ல சாதரணமப்பா என்பார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ், திடீரென சிறைத்துறை ஏடிஜிபியாகவும், டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர காவல்துறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டனர். இந்த பதவி மாற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், ஜார்ஜ் மீது எழுந்த மலையளவு புகார்களே மாற்றத்திற்குக் காரணம் என்கின்றனர்.
ஜார்ஜ், திரிபாதி, டி.கே.ராஜேந்திரன் ஆகிய மூவர்தான் வெள்ளிக்கிழமையன்று டிரான்ஸ்பர் செய்யப்பட்டவர்கள். இதில் இருவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த பதவியும், ஜார்ஜ்க்கு டம்மி பதவியும் அளிக்கப்பட்டதற்காக காரணம் முதல்வருக்கு ஜார்ஜ் மீதிருந்த கோபம்தான் என்கின்றனர் அதனால்தான் டி.கே.ராஜேந்திரன், திரிபாதியை சந்தித்த முதல்வர், ஜார்ஜை மட்டும் சந்திக்க மறுத்து விட்டாராம்.
கால்பந்து விளையாட்டு
‘இந்தியன் சூப்பர் லீக்' கால்பந்து போட்டி கடந்த 2ம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதன் தொடக்கவிழாவில், பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அர்ஜுன்கபூர், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், அலியாபட், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், மும்பை கால்பந்து அணி உரிமையாளர் நீட்டா அம்பானி ஆகியோர் வந்திருந்தார்கள். இதில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு சூப்பர் முக்கியத்துவம் தரப்பட்டது.
பதவி பறிபோக காரணம்
இந்திய அளவில் வி.வி.ஐ.பி-கள் கலந்துகொள்கிறார்கள் என்பது பற்றிய முறையான தகவல்களை சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முதல்வரின் நேரடிக் கவனத்துக்கு போகிற வகையில் தெரிவிக்கவில்லையாம். இதுவும் ஜார்ஜ் பதவி பறிபோனதற்குக் காரணம் என்கின்றனர்.
மலையளவு புகார்கள்
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில், காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ சௌந்தரராஜன், ‘சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஒரு சர்வாதிகாரியைப்போலச் செயல்படுகிறார். பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதே இல்லை' என்று ஆரம்பித்து அடுக்கடுக்கான புகார்களை வாசித்தார். இவற்றை அக்கறையோடு கவனித்துக்கொண்டிருந்த முதல்வர் ஜெயலலிதா, டி.ஜி.பி. அசோக்குமாரிடம், ஜார்ஜ் பற்றிய பைலை கேட்டதோடு, ஜார்ஜ் மீது வேறு என்னென்ன புகார்கள் இருக்கின்றன என்பது பற்றி மாநில உளவுத் துறையிடம் அறிக்கை கேட்டதாக தெரிகிறது.
அதிரடி மாற்றம்
ஜார்ஜுக்கு எதிராகப் பெரிய புகார் பட்டியலையே தயாரித்துவிட்டார்களாம் உளவுத்துறையினர். பத்திரிகையாளர்களைச் சந்திக்காதது, கேரளாவைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டது, வடபழனி இட விவகாரம் உள்ளிட்ட புகார்கள் வரிசையாக நின்றதாம். அதன்பிறகுதான் ஜார்ஜை மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாம். அதுபற்றி டிஜிபி அசோக்குமாரிடம்கூட கலந்தாலோசிக்கவில்லையாம்.
இன்னொரு காரணம்
அரசியல் காரணம் ஒன்றும் சொல்லப்படுகிறது. ‘விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ளது. ஆளும் கட்சி அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி, ஒவ்வொரு காயையும் கவனமாக நகர்த்திக்கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான், மூன்றரை வருடங்களாக அசைக்க முடியாத சக்தியாக இருந்த ஜார்ஜை சிறைத் துறைக்கும், ஏ.டி.ஜி.பி-யாக இருந்த டி.கே.ராஜேந்திரனை சென்னை நகர கமிஷனராக மாற்றியதற்கும் காரணம்' என்கின்றனர்.
எது எப்படியோ போயஸ்கார்டன் வீட்டு செல்லப்பிள்ளையாக, அசைக்க முடியாத சக்தியாக, சென்னை மாநகர கமிஷனராக வலம் வந்த ஜார்ஜ் மாற்றப்பட்டது பலரது முகத்தில் மகிழ்ச்சி ரேகையை படர விட்டிருக்கிறது என்னவோ உண்மைதான் என்கின்றனர்.