ஜெ., படத்தின் முன்னிலையில் பாராலிம்பிக் தங்க மகன் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி நிதி அளித்த ஓபிஎஸ்
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற சேலம் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி நிதியை தலைமை செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அளித்தார்.
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில் பாராலிம்பிக் போட்டியின் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு, 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார்.
மாரியப்பன் தங்கவேலுவுக்கு தமிழக அரசு சார்பில் அப்போதய முதல்வர் ஜெயலலிதா ரூ.2 கோடியை பரிசாக அறிவித்தார். ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், பாராலிம்பிக்கில் மாரியப்பன் தங்கவேலு தங்கப் பதக்கம் வென்றது இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை. பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதன்முறை. மாரியப்பனின் சாதனை இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஊக்கத்தை அளிக்கும். தமிழக அரசு சார்பில் அவருக்கு ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பரிசு பணத்தை பெற வேண்டும் என்று தனது விருப்பத்தை கூறியிருந்தார் மாரியப்பன். ஆனால் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் அவர் டிசம்பர் மாதம் உயிரிழந்தார்.
இந்த நிலையில் மாரியப்பன் நேற்று தனது பயிற்சியாளர் சத்யநாராயணா உடன் சென்னை வந்தார். போயஸ் தோட்டத்தில் சசிகலாவை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.
இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார் மாரியப்பன். அப்போது தன்னுடைய தங்கப்பதக்கத்தை காண்பித்தார். அதை வாங்கி ஜெயலலிதா படத்தின் முன்பாக மாரியப்பனின் கழுத்தில் அணிவித்தார் ஓ.பன்னீர் செல்வம். இதனையடுத்து ரூ.2 கோடிக்கான காசோலையை முதல்வர் வழங்கினார். ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ரூ. 2 கோடியை பெற நினைத்த மாரியப்பனுக்கு தற்போது ஜெயலலிதா படத்தின் முன்பாக அவரை சாட்சியாக வைத்து நிதியை வழங்கினார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.