பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கத் தயார்.. ஆளுநருக்கு முதல்வர் ஓ.பி.எஸ். தகவல்
பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கத் தயார் என்று ஆளுநருக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவுடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளார்.
சசிகலா சிறைக்குப் போகவுள்ள புதிய சூழலில் இன்று ஆளுநர் ராவை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். அப்போது அவர் ஆளுநரிடம், தனக்குப் பெரும்பான்மை பலம் இருப்பதாகவும், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கு ஆளுநர் என்ன பதில் அளித்தார் என்பது தெரியவில்லை. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமியை புதிய அதிமுக சட்டசபை கட்சித் தலைவராக அக்கட்சியினர் தேர்வு செய்து ஆளுநருக்கும் தகவல் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளனர்.எனவே இந்த சமயத்தில் முதல்வர் ஆளுநருடன் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஓ.பி.எஸ்ஸும், எடப்பாடியும் ஆட்சியமைக்க உரிமை கோரினால், இருவரையும் ஒரே சமயத்தில் சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடலாம் என்று தெரிகிறது.