"அறை எண் 401-ல்" சிங்கிள் பால் கிடைக்காமல் டென்ஷனான மாஜி 'டீ மாஸ்டர் ஓ.பி.எஸ்.'
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பணிகளைப் பார்வையிட சென்ற முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தங்கியிருந்த திருச்சி ஹோட்டலில் சிங்கிள் பால் கிடைக்காமல் டென்ஷனான ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஸ்ரீரங்கத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக அமைச்சர்கள் அனைவருமே ஸ்ரீரங்கம் தொகுதியில் முகாமிட்டு 'நாடே' திரும்பிப் பார்க்கும் வகையில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் 'அலறும்' வகையில் பிரசாரம் செய்தனர். இந்த "களேபரங்களை" கண்காணிப்பதற்காக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருச்சிக்கு வந்திருந்தார்.
அறை எண் 401
திருச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் அறை எண் 401-ல் அவர் முகாமிட்டிருந்தார்.
ஒரு கப் பால் ஆர்டர்
ஸ்ரீரங்கத்தில் படுபிசியாக இருந்த அமைச்சர்களுடன் விடிய விடிய முதல்வர் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தினார். நள்ளிரவைத் தாண்டிய நிலையில் தன் உதவியாளரிடம் ஒரு கப் பால் ஆர்டர் செய்ய சொல்லியிருக்கிறார். அவரது உதவியாளரும் அறையில் இருந்த படியே ஆர்டர் செய்திருக்கிறார்.
இன்னுமா வரலை..
ஆனால் அரை மணிநேரம் கடந்தும் முதல்வர் அறைக்கு பால் வந்து சேரவில்லை. இதனால் கடுப்பாகிப் போன முதல்வர் பன்னீர்செல்வம் உதவியாளரை கடிந்திருக்கிறார்.
பறிபோன ப்ளாஸ்க்
அதிர்ச்சியடைந்த உதவியாளர் வெளியே வந்து ஹோட்டல் நிர்வாகிகளை வசைபாடிக் கொண்டிருந்த போது ஒருவர் டீயுடன் ப்ளாஸ்க்கை கொண்டு சென்றிருக்கிறார். அதைப் பற்றி விசாரித்த கையோடு ப்ளாஸ்க்கை பறித்துக் கொண்டு முதல்வர் அறைக்கு ஓடியிருக்கிறார்.
வேறவழியில்லாமல் டீ..
ஆனால் அதில் இருந்தது டீ என்பதால் அதிர்ச்சியடைந்த முதல்வர் பன்னீர்செல்வம், நான் பால் கேட்டா டீ தருகிறீர்களே என்று மீண்டும் கடிந்து கொண்டார்.. வேறு வழியில்லாமல் டென்ஷனுடன் அந்த டீயைக் குடித்து முடித்திருக்கிறார் முதல்வர் பன்னீர்செல்வம்.
சிங்கிள் பால் கிடைக்கலையே..
அரசியல் ஏற்றம் காண்பதற்கு முன்னர் முதல்வர் பன்னீர்செல்வம் தேனியில் டீக்கடை நடத்தியவர். அவருக்கு சிங்கிள் பால் தராமல் பாடாய்படுத்தியிருக்கிறது திருச்சி ஹோட்டல் நிர்வாகம் என்கின்றனர் அ.தி.மு.க.வினர்,