மேலூர் விவசாயிகள் போராட்டம் எதிரொலி- பெரியாறு கால்வாயில் வைகை நீரை திறக்க முதல்வர் உத்தரவு
மேலூர் விவசாயிகளின் போராட்டத்தின் எதிரொலியாக வைகை அணையில் இருந்து பெரியாறு கால்வாயில் நீரை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலூர்: மேலூர் விவசாயிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து வைகை அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
வைகை அணையில் பெரியாறு பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டால் மேலூர் வரையில் விவசாயிகளுக்கு ஒருபோக பாசனத்துக்கு நீர் கிடைக்கும். ஆனால் பெரியாறு பிரதான கால்வாயில் நீரை திறந்துவிடாமல் வழக்கத்துக்கு மாற்றாக பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களுக்கு வைகை அணை நீர் திறக்கப்பட்டிருக்கிறது.
இதனால் ஆத்திரமடைந்த மேலூர் சுற்றுவட்டார விவசாயிகள் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காலை முதல் சுமார் 5 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தண்ணீர் திறக்கும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்தனர்.
மேலும் சாமியானா பந்தல் அமைத்து விவசாயிகள் நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் மதுரை- திருச்சி சாலையில் போக்குவரத்து முடங்கியது. சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் வரிசை கட்டி நிற்க தொடங்கின.
திருச்சியிலிருந்து மதுரை செல்ல கொட்டாம்பட்டி, நத்தம் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இந்நிலையில் வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாய், திருமங்கலம் பிரதான கால்வாய்களில் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
நாளை முதல் 27-ஆம் தேதி வரை திருமங்கலம் பிரதான கால்வாய் வாயிலாக 200 கனஅடி நீரும் பெரியாறு பிரதான கால்வாய் வாயிலாக 700 கனஅடி நீரும் திறக்கப்படவுள்ளது. இதையடுத்து மேலூர் விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.