அமைச்சர்கள் அனைவரும் சென்னையில் இருக்க முதல்வர் திடீர் உத்தரவு
சென்னை: தமிழக அமைச்சர்கள் அனைவரும் சென்னையில் தங்கியிருக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென உத்தரவிட்டுள்ளார்.
நாளை யாரும் வெளியூர் போகக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு கிளம்பியுள்ளது.
டிடிவி தினகரன் அதிமுக நிர்வாகிகளை நீக்க ஆரம்பித்துள்ளனர். ஆர். பி. உதயக்குமார், ராஜன் செல்லப்பா, எம்.ஆர். விஜயபாஸ்கர் என பலரையும் அவர் நீக்கி வருகிறார்.
இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தனது பக்க நடவடிக்கைகளை முடுக்கி விட ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு கட்டமாக அமைச்சர்கள் அனைவரும் நாளை சென்னையிலேயே இருக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளாராம்.
முதல்வரின் உத்தரவினை அடுத்து அதிமுக அமைச்சர்கள் அவசரம் அவசரமாக சென்னை திரும்புகின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை ரத்து செய்து விட்டார். அதிமுக பொதுக்குழுவைக் கூட்டுவது தொடர்பாக முக்கிய முடிவுகளை அதிமுக தலைமை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.
மொத்தத்தில் நாளையும் அதிமுக தரப்பிலிருந்து பரபரப்புகளுக்குப் பஞ்சமிருக்காது என்று நம்பலாம்.