சண்டிகரில் உயிரிழந்த கிருஷ்ணபிரசாத் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி உதவி: முதல்வர் அறிவிப்பு
சண்டிகர் மருத்துவ கல்லூரியில் உயிரிழந்த மாணவர் கிருஷ்ண பிரசாத் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை: சண்டிகர் மருத்துவ கல்லூரியில் உயிரிழந்த மாணவர் கிருஷ்ண பிரசாத் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ராமேஷ்வரத்தை சேர்ந்த தமிழ் மாணவர் கிருஷ்ண பிரசாத் . இவர் சண்டிகரில் செயல்பட்டு வரும் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.டி ஜெனரல் மெடிசின் துறையில் படித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை , விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிரசாத்தை கடந்த 4 நாட்களாக காணவில்லை . இதனை அடுத்து அவரின் துறை பேராசியர் அவரது விடுதியின் அறைக்கு சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம்தான் கல்லூரியில் கிருஷ்ணபிரசாத் சேர்ந்திருக்கிறார். இன்று காலை விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிருஷ்ண பிரசாத் மீட்கப்பட்டுள்ளார்.
இத்தகவல் கிடைத்ததும் கிருஷ்ணபிரசாத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சண்டிகர் விரைந்துள்ளனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த கிருஷ்ணபிரசாத்தின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே உயிரிழந்த மாணவர் கிருஷ்ண பிரசாத் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில் கிருஷ்ண பிரசாத்தின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். கிருஷ்ண பிரசாத் உடலை அவருடைய சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.