பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நிச்சயம் நல்ல முடிவு எடுப்பார்.. முதல்வர்
சென்னை: 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நிச்சயம் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம்... அதற்காக காத்திருக்கிறோம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்ட்சபையில் இன்று விளக்கம் அளித்தார்.
7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசு மெத்தனமாக இருப்பதாக சட்டசபையில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் குற்றச்சாட்டினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவி சண்முகம் 7 பேர் விடுதலை விவகாரத்தில் எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டு முடிந்ததை செய்து விட்டோம்:
அமைச்சரவை முடிவு பற்றி ஆளுநரிடமும் தெரிவித்துவிட்டோம். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் அதிகாரத்தில் அரசு தலையிட முடியாது. இந்த விவகாரத்தில் இனி ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று விளக்கம் அளித்தார்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் இது தொடர்பாக அளித்த விளக்கத்தில், 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம். அதற்காக காத்திருக்கிறோம் என்றார். அதிமுக அரசுக்கு 7 பேரை விடுவிக்க வேண்டும் என்பதே விருப்பம். அதனால் தான் எங்கள் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களுக்கு அவ்வப்போது பரோல் வழங்கினோம். அதற்கு முன்பு அவங்களுக்கு பரோல் கூட வழங்கப்பட்டது இல்லை என்றும் முதல்வர் விளக்கம் அளித்தார்.
தருமபுரியில் 3 மாணவிகள் பேருந்துடன் வைத்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விரைவில் விடுதலை செய்யப்பட்டார்களே என எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். அதற்கு சட்டசபையில் பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், தருமபுரியில் பேருந்து வழக்கில் குற்றவாளிகள் 3 மாணவிகளை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யவில்லை என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது என்று விளக்கம் அளித்தார். அத்துடன் மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் எந்த அடிப்படையில் திமுக ஆட்சியில் குற்றவாளிகள் விரைவில் விடுவிக்கப் பட்டனர் என்றும் அமைச்சர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பினார்.