மத்திய அரசிடம் இருந்து மழை நிவாரண நிதி கிடைக்கும்... முதல்வர் பழனிசாமி நம்பிக்கை!
Recommended Video
சென்னை : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார்.
வடகிழக்குப் பருவமழை ஒரு வார காலமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வழக்கத்தைவிட அதிக அளவில் மழை கொட்டித் தீர்த்தது. மழை நிவாரணப் பணிகளுக்காக ரூ. 1500 கோடியை மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியுள்ளது. இந்நிலையில் மழை கடுமையாக வாட்டி எடுத்த 3 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்வர் பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதே போன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை செயலர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
5 நாட்களில் அதிக மழை
இந்த கூட்டத்தின் முடிவில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது : மழைக்காலங்களில் எவ்வாறு செயல்படலாம் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 5 நாட்களில் பெய்துள்ளது. 72 சதவீதம் மழை 5 நாட்களிலேயே மழை பெய்துள்ளது. சிறப்பான குடிமராமத்து பணி காரணமாக கூடுதலாக நீர் சேமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் வேலுமணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செல்லவில்லை ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒரு பயணம் அது.
மத்திய அரசின் நிதி கிடைக்கும்
விரைவில் மத்திய அரசின் நிதி தமிழக அரசுக்கு கிடைக்கும். 2015ல் புயல், வெள்ளத்தின் போது பிரதமரிடம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்து நிவாரண நிதி கேட்டிருந்தார். இப்போதும் பிரதமர் மோடி நேரம் ஒதுக்கி சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருக்கும் பாதிப்புகளை கேட்டறிந்தார். எவ்வளவு நிதி, எந்தெந்த திட்டங்களுக்கு வேண்டும் என்று பிரதமர் கேட்டார் அதை விரிவாக கொடுத்துள்ளோம்.
வடிகால் வசதி இல்லை
டிசம்பர் மாதம் வரை மழை இருப்பதால் உடனடியாக பாதிப்புகளை கணக்கெடுக்க முடியாது, தமிழகம் மட்டுமல்ல உலக அளவில் எங்கு எடுத்துக் கொண்டாலும் அன்றாட நீர் வெளியேறவே கால்வாய் அமைத்துள்ளனர். கனமழை பெய்தால் உடனே நீர் வெளியேற முடியாத நிலையில் அவை சாலைகளில் தான் தேங்குகின்றன.
அரசு துரித கதியில் செயல்பாடு
இருப்பினும் அதிமுக அரசு வெள்ளநீர் வடிகாலுக்கு 4 ஆயிரத்து 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி சுமார் 300 கி.மீட்டருக்கு வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு உடனுக்குடன் எடுத்த நடவடிக்கை காரணமாக தேங்கிய மழை நீர் உடனுக்குடன் அகற்றப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.