காவிரி பற்றி பேச அழைப்பு விடுத்த மத்திய அரசு... முதல்வர் அவசர ஆலோசனை!
காவிரி விவகாரம் பற்றி பேச 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அதிகாரிகளுடன் முதல்வர் அவசர ஆலோசனை நடத்தினார்.
சென்னை : காவிரி விவகாரம் பற்றி பேச 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் அவசர ஆலோசனை நடத்தினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உத்தரவிட்டது. ஆனால் இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு மத்திய அரசு மீது எழுந்தது.
தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சியினர் இது தொடர்பாக டெல்லி சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்த நேரம் கோரப்பட்டது. ஆனால் பிரதமர் நேரம் ஒதுக்காத நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க அழைப்பு விடுத்ததாக தெரிகிறது. இதனால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில்,இன்று மத்திய அரசு
காவிரி விவகாரம் குறித்து பேச கர்நாடகா, கேரளா, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்க அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் டெல்லியில் மார்ச் 9ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை செயலர்கள் பங்கேற்பார்கள் என்றார். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதற்காகவே இந்த கூட்டம் நடைபெறுவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.