பரபரப்பில் முதல்வர் பழனிசாமி... சபாநாயகருடன் திடீர் சந்திப்பு!
அதிமுக பொதுக்குழு நாளை கூடவுள்ள நிலையில் சபாநாயகர் தனபாலை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் சந்தித்துள்ளார்.
சென்னை : அதிமுக கொறடாவை நீக்குமாறு சபாநாயகரிடம் வெற்றிவேல் எம்எல்ஏ மனு அளித்துள்ள நிலையில் சபாநாயகரை முதல்வர் பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார்.
முதல்வர் பழனிசாமி கூட்டியுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதனால் அங்கு பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. டிடிவி. தினகரன் முதல்வர் பழனிசாமி கூட்டவுள்ள பொதுக்குழுவிற்கு அதிமுகவினர் செல்லவேண்டாம் என்று கூறியுள்ளார் நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதனால் உச்சகட்ட பரபரப்பில் உள்ளனர் அதிமுக தொண்டர்கள்.
இந்நிலையில் அதிமுக கொறடா ராஜேந்திரன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததால் அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் சபாநாயகரிடம் காலையில் மனு அளித்தார். இதனிடையே முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது வெற்றிவேல் அளித்த மனு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.