நாடோ... காடோ... எல்லாமே ஒன்றுதான் - எடப்பாடி பழனிச்சாமி சொன்ன குட்டிக்கதை
காட்டையே நாடாக மாற்றிய மன்னன் கதையை எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சசாமி
நாமக்கல் மாவட்டம் கருப்பட்டிபாளையத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
சிலர் திமுகவுடன் சேர்ந்து ஆட்சியை கலைக்க நினைக்கிறார்கள், அது நடக்காது. ஏதாவது ஒரு போராட்டத்தை அறிவிக்கிறார்கள். போராட்டத்தால் அரசை ஒன்றும் செய்ய முடியாது. ஆட்சி நீடிக்காது எனக் கூறிய எதிர்க்கட்சி தலைவரின் பேச்சை எல்லாம் தகர்த்து ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா வழியிலான ஆட்சியில் எந்த ஒரு குறையையும் காண முடியாது. மத்திய அரசுக்கு தமிழக அரசு அடிமையாக இல்லை. மத்திய அரசுடன் இணக்கமான சூழல் இருந்தால் தான் தமிழக அரசின் திட்டங்களுக்கு நிதியுதவி கிடைக்கும் என்று கூறினார்.
ஒரு வயதான மன்னன் தனக்கு பிறகு நாட்டை ஆள புதிய மன்னனை தேர்வு செய்ய நினைத்தான், அந்த மன்னன் ஒரு நிபந்தனையும் விதித்தான்.
அதாவது தனக்குப் பிறகு நாட்டை ஆளும் மன்னன் 5 ஆண்டுகள் கழித்து ஆள் இல்லாத காட்டிற்கு கொண்டு போய் விட்டு விடுவோம் என்பதுதான் அந்த நிபந்தனை.
பலர் மன்னனாக ஆசைப்பட்டாலும் 5 ஆண்டுகளில் காட்டிற்கு போக வேண்டுமே என்ற பயம் ஆட்டி படைத்தது. இருந்தாலும் மன்னனின் மனதை மாற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் நாட்டை ஆள சம்மதித்தனர்.
அடிக்கடி வயதான மன்னனை போய் பார்த்து காட்டிற்கு அனுப்பி விட வேண்டாம் என்றும் கெஞ்சி கேட்டனர். ஆனால் அந்த வயதான மன்னன் செவி சாய்க்கவில்லை. காட்டிற்கு அனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அதன் பிறகு மன்னராக யோசித்தனர். ஒரே ஒரு இளைஞன் மட்டும் மன்னராக சம்மதித்தார். அந்த மன்னருக்கு முடி சூட்டப்பட்டது. அந்த இளைஞர் மன்னரான பின்னர் ஒரு முறை கூட வயதான மன்னரைப பார்த்து பேசவில்லை. காட்டிற்கு அனுப்பவேண்டாம் என்று கெஞ்சவில்லை.
5 ஆண்டுகள் முடிந்தது. மன்னர் காட்டிற்கு செல்லும் காலமும் வந்தது. படகில் ஏற்றி ஆள் இல்லாத தீவுக்கு அனுப்ப முடிவு செய்தனர். அப்போது சிரித்துக்கொண்டே படகில் ஏறினார் அந்த இளைஞர்.
எல்லோருக்கும் ஆச்சரியம். இதுநாள்வரை படகில் ஏறுபவர்கள் அழுதுகொண்டேதான் ஏறுவார்கள். நீயோ சிரித்துக்கொண்டே இருக்கிறாயே என்று இளைஞரை பார்த்து கேட்டார் வயதான மன்னர்.
அதற்கு அந்த இளைஞரோ... கடந்த 5 ஆண்டுகளில் நான் அந்த அடர்ந்த காட்டை செம்மை படுத்தி மக்கள் வாழ தகுந்த நாடாக மாற்றி விட்டேன். அங்கே கோட்டைகள்... மாட மாளிகைகளை கட்டி விட்டேன் என்று கூறினார். இப்போது காடோ நாடோ எல்லாமே ஒன்றுதான் என்று கூறினார் அந்த இளைஞர். இந்த கதையை எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் சொல்லி முடித்தார் எடப்பாடி பழனிச்சாமி.
எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு போகும் காலம் வந்து விட்டது என்று என்று டிடிவி தினகரன் கூறி வரும் நிலையில் முதல்வர் கூறிய குட்டிக்கதை எதையோ உணர்த்துவது போல இருந்தது.