நமச்சிவாயத்துக்கும், நாராணயசாமிக்கும் "சண்டை".. புதுச்சேரி முதல்வர் தேர்வில் செம குழப்பம்!
புதுச்சேரி: காங்கிரஸ் என்றால் அங்கே குழப்பமும், கோஷ்டிப் பூசலும் இல்லாமல் இல்லாமல் எந்தக் காரியமும் நடைபெறாது என்பார்கள். அதற்கு புதுச்சேரி பொருத்தமான உதாரணம். காங்கிரஸ் திமுக கூட்டணி அங்கு ஆட்சியைப் பிடித்தும் கூட அடுத்த முதல்வர் யார் என்பது இன்னும் தெளிவாகவில்லை. காரணம், கோஷ்டிப் பூசல்.
தேர்தலுக்கு முன்பு வரை மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம்தான் முதல்வராவார் என்று கூறப்பட்டு வந்தது. நமச்சிவாயம் தரப்பும் அதனால் உற்சாகமாக வேலை பார்த்தது. ஆனால் தற்போது திடீரென நாராயணசாமி புதிய போர்க்கொடியை உயர்த்தியுள்ளார். தானே முதல்வர் பதவிக்கு தகுதியானவர் என்று டெல்லியில் வைத்து அவர் காய் நகர்த்துவதாக கூறப்படுகிறது. இதனால் நமச்சிவாயம் தரப்பு செம காண்டாகியுள்ளதாம்.
இந்தப் பஞ்சாயத்தைத் தொடர்ந்து நமச்சிவாயம் டெல்லி புறப்பட்டுப் போயுள்ளார். ராகுல் காந்தியைச் சந்தித்து அவர் பேசவுள்ளாராம்.
புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் - திமுக கூட்டணி 17 தொகுதிகளை வென்றுள்ளது. இதில் காங்கிரஸின் பங்கு 15 ஆகும். திமுக இரண்டு இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.
பக்கத்து மாநிலமான தமிழகத்தில் தேர்தல் முடிவு வெளியாகி, முதல்வரும், ஆட்சியும் பதவியேற்று முடித்து விட்டனர். அந்தப் பக்கம் கேரளாவிலும் கூட முதல்வர் யார் என்பது தெளிவாகி விட்டது. அமைச்சர்கள் பட்டியலும் கூட வெளியாகி விட்டது. சட்டசபை காங்கிரஸ் தலைவரையும் கூட அங்கு தேர்வு செய்து விட்டனர்.
ஆனால் இத்தனை நாட்களாகியும் புதுச்சேரியில் மட்டும் எதுவும் இன்னும் முடிவாகவில்லை. இந்த பெரும் குழப்பத்திற்குக் காரணம் முன்னாள் அமைச்சரான நாராயணசாமி என்கிறார்கள். ஆட்சியைப் பிடிக்கும் வரை அமைதியாக இருந்து விட்டு இப்போது முதல்வர் பதவிக்கு அவர் முண்டியடிப்பதால் பெரும் குழப்பமாகியுள்ளது.
முதல்வர் யார் என்ற போட்டியில் வெல்லப் போவது நமச்சிவாயமா அல்லது நாராயணசாமியா என்ற பெரும் விவாதமே மாநிலத்தில் நடந்து வருகிறதாம். கட்சியின் மேலிடத்திலும், மேலிடப் பார்வையாளர்கள் மத்தியிலும் நாராயணசாமிக்கு நல்ல லாபி உள்ளதாம். ஆனால் எம்.எல்.ஏக்கள் மத்தியில் நமச்சிவாயத்திற்கு ஆதரவு அதிகம் என்கிறார்கள்.
இன்று மாலைக்குள் யார் அடுத்த முதல்வர் என்பது தெளிவாகி விடும் என்று கூறப்படுகிறது.