சற்று முன் ஓபிஎஸ் மரணம்... இந்த போஸ்டர் கூட வச்சிருந்தாங்க: சட்டசபையில் முதல்வர்
சென்னையில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக இன்று சட்டசபையில் விளக்கம் அளித்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சில போஸ்டர்களை சபாநாயகரிடம் அளித்து அதற்கு விளக்கம் கொடுத்தார்.
சென்னை: சட்டசபையில் இன்று சென்னை வன்முறை தொடர்பாக பேசிய முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், தான் மரணமடைந்து விட்டதாக கூட பேனர்களை வைத்திருந்தனர் என்று கூறினார்.
இதுதொடர்பாக அவர் சட்டசபையில் பேசியதிலிருந்து:
ஜல்லிக்கட்டு போராட்டம் அமைதியாக நடைபெற்ற போது சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் குடியரசு தின விழாவை சீர்குலைக்க திட்டமிட்டிருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் வெளியானது.
இதனையடுத்து 23ஆம் தேதியன்று காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகுமாறு கூறினர். அதில் 3000 பேர்வரை கலைந்து சென்றனர். சில அமைப்பினர் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு நிரந்தர சட்டம், காவிரி முல்லை பெரியாறு பிரச்சினை, பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்தனர்.
சில அமைப்பினர் சார்பில் ஒசாமா பின்லேடன் தொடர்பான பதாகைகளையும் வைத்திருந்தனர். தனி தமிழ்நாடு கோரிக்கை, குடியரசு தினத்தை கறுப்பு தினமாக அனுசரிப்போம் என்று கூறும் வகையில் பேனர்களை வைத்திருந்தனர் என்றார். (அந்த பேனர்களை அனைவருக்கும் காண்பித்தார்).
இது கூட இன்னொரு பேனரும் வைத்திருந்தனர். 'சற்று முன் ஓபிஎஸ் மரணம்' என்கிற பேனரும் வைத்திருந்தனர். இதனையடுத்தே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர் என்று முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கூறினார்.