மணல் குவாரியா.. "நீட்"டா.. கேள்வி கேட்டால் "எஸ்" ஆகும் சிஎம் முதல் செங்கோட்டையன் வரை!
பிடிக்காத, பதில் சொல்ல முடியாத கேள்வியை கேட்டுவிட்டால் செய்தியாளர் சந்திப்பில் இருந்து எஸ்கேப் ஆவது முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வரை வாடிக்கையாகிவிட்டது.
சென்னை: தமிழக முதல்வர், அமைச்சர்கள் என யார் செய்தியாளர்களை சந்தித்தாலும் கேள்வி கேட்டால் எஸ்கேப் ஆகிவிடுவார்கள். அதுவும் மணல் குவாரி பற்றிய கேள்வி என்றால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியே ஓடி விடுகிறார்.
தமிழகம் முழுவதும் இன்று பனிரெண்டாம் மாணவர்களுக்கான தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு குறித்த முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய செயலாளர் சபிதா உடன் கிளம்பினார் கல்வி அமைச்சர் செங்கோட்டையன்.
சென்னை எழும்பூரில் உள்ள பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு முடிந்த பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.
சொல்ல வேண்டியதில்லை..
அப்போது, அவர் என்ன சொல்ல வேண்டும் என்ற நினைத்தாரோ, அதாவது, தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, தேர்வு மையங்கள் தொடர்பான செய்திகள் என அனைத்தையும் அவரே சொல்லி முடித்தார்.
மழுப்பல் பதில்
அதன்பின்னர், செய்தியாளர்கள் கல்வி தொடர்பாக பல கேள்விகளை அவரிடம் கேட்டனர். தேர்வு குறித்த அனைத்துக் கேள்விகளுக்கும் டக்கு டக்கு என்று பதில் சொன்ன செங்கோட்டையன், நீட் தேர்வு பற்றிய கேள்வியை கேட்ட உடன், டக்கென்று நாற்காலியில் இருந்து எழுந்து சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.
முன்னேர் முதல்வர்..
முன்னேரு போவது போல்தானே பின்னேரும் போகும் என்பார்கள். செங்கோட்டையனுக்கு முன்னோடியாக நம்ம முதல்வர் பழனிசாமியே உள்ளார். அவர் முதல்வராக தலைமை செயலகத்தில் முறையாக பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு இப்படித்தான் எஸ்கேப் ஆனார்.
மணல் குவாரி கேள்வி
மணல் குவாரி மூடப்படுமா என்று முதல்வரிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்ட போது, ஒரு சிரிப்பை சிரித்து வைத்துவிட்டு எடப்பாடியார் எட்ட ஓடிவிட்டார். இதுபோன்ற சம்பவங்களின் போது, செய்தியாளர் சந்திப்பை நடத்திவிட்டு கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் போனால் எப்படி என்று செய்தியாளர்கள் புலம்புவதை தவிர்க்க முடியவில்லை.