முதல்வர் பதவி விலக கோரி தற்கொலை முயற்சி போராட்டம் நடத்திய டிராபிக் ராமசாமி!
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், சர்ச்சைக்குரிய அமைச்சர்களும் பதவி விலகாவிட்டால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வதாக சமூக சேவகர் டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.
பாரிமுனையிலுள்ள வங்கி கட்டிடம் ஒன்றின் 4வது மாடியில் ஏறி படுத்துக்கொண்டு டிராபிக் ராமசாமி, தற்கொலை முயற்சி போராட்டம் நடத்தினார். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
டிராபிக் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது: நாளை காலைக்குள் எனது கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் நான் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வேன். முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். அமைச்சர் காமராஜ் பதவி விலக வேண்டும். பொய் கேஸ் போட்டு என்னை போலீசார் கைது செய்தனர். ஆனால் காமராஜுக்கு அதே போலீசார் சல்யூட் அடிக்கிறார்கள்.
விஜயபாஸ்கர் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளது. அவரும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடிய 10 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு கோரிக்கைகளை அடுக்கியுள்ளார் டிராபிக் ராமசாமி. மேலும், அம்மா ஆட்சி என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஜெயலலிதாவே மரணமடைந்துவிட்ட பிறகு என்ன அம்மா ஆட்சி என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்.