கந்துவட்டியால் பற்றி எரியும் மக்கள்.. கரடி கதை சொன்ன முதல்வர்!
கந்து வட்டி கொடுமைக்கு திருநெல்வேலியில் ஒரு குடும்பமே தீக்குளித்த நிலையில் அதே நேரத்தில் சிவகாசியில் கரடி கதை சொல்லிக்கொண்டிருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
சிவகாசி: திருநெல்வேலியில் கந்து வட்டி கொடுமைக்கு ஒரு குடும்பமே தீக்குளித்த நிலையில் அதே நேரத்தில் சிவகாசியில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் கரடி கதை கூறினார்.
பேராசை பெரு நஷ்டம் என்பதை விளக்கும் வகையில் கரடி கதை ஒன்றை பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
"ஆற்றில் சில நண்பர்கள் குளித்துக்கொண்டிருந்தனர். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கரையோரம் வசித்தவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
அவர்களை ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் காப்பாற்றினர். ஒருவர் மட்டும் பேராசை காரணமாக ஆற்றில் மிதந்து வந்த பொருட்களை சேகரிப்பதில் கவனம் செலுத்தினார்.
அப்போது நண்பர்கள் பலரும் அவரைப் பார்த்து "வெள்ளத்தில் செல்பவர்களை காப்பாற்று... பேராசைப் படாதே நண்பா"... என்று கூறினர்.
அதை கேட்காமல் ஒருவன் மட்டும் பொருட்களை எடுத்து சேகரிப்பதிலேயே கவனமாக இருந்தான். அப்போது கம்பளி மூட்டை போன்று ஒன்று மிதந்து வந்ததைக் கண்டார்.
அதைப்பார்த்து ஆசையோடு ஓடிப்போய் பிடித்துக்கொண்டார். கம்பளி மூட்டையை கரைக்கு கொண்டு வர முயற்சி செய்தான். நீண்ட நேரம் ஆகியும் கரைக்கு வர முடியவில்லை நடு ஆற்றிலேயே போராடிக்கொண்டிருந்தான்.
அதைப் பார்த்த நண்பர்கள்... "நீ சீக்கிரம் கம்பளி மூட்டையை விட்டு விட்டு கரைக்கு திரும்பி வா"... என்று கூப்பிட்டனர்.
அதற்கு அவனோ... "நான் எப்போதோ அந்த கம்பளி மூட்டையை விட்டு விட்டேன். ஆனால் இதுதான் என்னை விட மாட்டேங்குது. இது கம்பளி மூட்டையல்ல கரடிக்குட்டி" என்று கூறினான் அந்த நண்பன்.
பேராசை காரணமாக கரடியிடம் மாட்டிக்கொண்டான் அந்த நண்பன். இப்படித்தான் பலரும் சேரக்கூடாத இடத்திற்கு போய் சேர்ந்து கொண்டு அங்கிருந்து வர நினைத்தாலும் அவர்களை கரடி போல பிடித்துக்கொண்டு விட மறுக்கின்றனர் என்று கதை கூறிவிட்டு சிரித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
அதெல்லாம் சரிதான் முதல்வரே... சிவகாசியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநெல்வேலியில் ஒரு குடும்பமே தீக்குளித்து மாண்டு போனதே அவர்களுக்கு ஒரு இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்று கூடவா உங்களுக்கு தோன்றவில்லை என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது.