உங்கள் போக்குவரத்து சங்கங்களை பணிக்கு திரும்ப சொல்லுங்கள்.. எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் பதிலடி
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் தங்களின் கருத்துகளை முன்வைத்த நிலையில், முதல்வர் அவர்களுக்கு புதிய வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் அரசை முடிவெடுக்க கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், கட்சி தலைவர்கள் தங்களின் சங்கங்களை வேலைக்கு திரும்பும்படி வலியுறுத்துங்கள் என முதல்வர் பழனிசாமி அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சட்டசபையின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது. அதில், மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 12 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஒக்கி புயலால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் குறித்து எதிர்க்கட்சியினர் தங்களின் கருத்துகளை முன்வைத்தனர். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு ஆதரவான முடிவை எடுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு வலியுறுத்தல்களும் சட்டசபையில் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் பழனிசாமி, முதலில் எதிர்க்கட்சித் தலைவரும், கட்சித் தலைவர்களும் தங்களின் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஊழியர்களை பணிக்கு திரும்ப வலியுறுத்துங்கள் என்றார்.
மேலும் மக்களின் நலனை கருதி இதனை அனைத்து கட்சித் தலைவர்களும் செய்ய வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார். மேலும் பேசிய அவர் தொழிலாளர்களும் போராட்டத்தை கைவிட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.