சிவில் சர்வீஸ் பிரதான தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை: ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு, யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் பிரதான தேர்வுகளை, இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:
சென்னையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் எந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பதை தனிப்பட்ட முறையில் நீங்கள் அறிவீர்கள். சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும் இப்போதுதான் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
வெள்ளப் பாதிப்பு காரணமாக மின்சார விநியோகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் தடைபட்டன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் நாளை திங்கள்கிழமைதான் (டிச.14) திறக்கப்படுகிறது.
தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வுகளும், பள்ளித் தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான பிரதான தேர்வை தேர்வு டிசம்பர் 18-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இந்தத் தேர்வு எழுதும் மாணவர்கள் சென்னையில்தான் தங்கி இந்தத் தேர்வுக்கு தங்களைத் தயார்படுத்துகின்றனர்.
வெள்ளத்தின் காரணமாக கடந்த சில வாரங்களாக இயல்பு வாழ்க்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டதால், மாணவர்களால் தேர்வுக்குத் தயார்படுத்துவதில் கவனம் செலுத்தமுடியவில்லை.
கடந்த பிற பகுதி மாணவர்கள் தடையின்றி தங்களைத் தயார்செய்து வரும் வேளையில், தமிழக மாணவர்கள் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். இந்த இன்னல்களைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, டிசம்பர் 18 முதல் பிரதான தேர்வு நடத்தப்பட்டால அது தமிழக மாணவர்களை மிகவும் பாதிக்கும்.
பெருவாரியான மக்களைப் பாதிக்கும் மிகப்பெரிய பேரழிவாக வெள்ளப் பாதிப்பு இருந்ததால், இந்தப் முதன்மை தேர்வை குறைந்தபட்சம் 2 மாதங்களுக்குத் தள்ளிவைக்க வேண்டும். அதன்மூலம் தமிழகத்திலிருந்து இந்தத் தேர்வை எழுதும் மாணவர்கள் தங்களை முழுமையாகத் தயார்செய்துகொண்டு நாட்டின் பிற பகுதி மாணவர்களோடு போட்டியிட முடியும் என அவர் கூறியுள்ளார்.