அலங்காநல்லூர் வாடி வாசல் தயார்.. அடுத்த வாரம் ஜல்லிக்கட்டு.. முதல்வர் தொடங்கி வைக்கிறார்!
அடுத்த வாரம் நடக்க இருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
சென்னை: அடுத்த வாரம் நடக்க இருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருகிறது.
சென்ற வருடம் ஜல்லிக்கட்டு நடத்த கோரி தமிழகமே மெரினாவில் திரண்டது. மக்களின் அந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று உலகமே திரும்பி பார்த்தது.
இந்த நிலையில் நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு அனுமதி வழங்கியது. எனவே இந்தமுறை பொங்கலுக்கு தமிழகம் முழுக்க பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளது.
அதேபோல் வரலாற்று சிறப்புமிக்க மிக்க அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியும் இந்த முறை வழக்கம் போல நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டது. காளைகள் அனைத்தும் பயிற்சி கொடுக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார். அதேபோல் இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் பங்கேற்கிறார்.
மேலும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. மிகவும் பெரிய அளவில் இந்த விழா நடத்தப்பட உள்ளது.