சென்னை: சிஎம்டிஏ அதிகாரிகள் 24 அடுக்குமாடி குடியிருப்புகளில் சோதனை
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டப்படும் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் போன்றவற்றின் உறுதித் தன்மை குறித்து சி.எம்.டி.ஏ அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக 24 கட்டிடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமான விபத்தில் இதுவரை 61 பேர் பலியாகி உள்ளனர். நெஞ்சை பதற வைக்கும் இந்த கோர சம்பவத்தை தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டு வரும் பல அடுக்குமாடி கட்டிடங்கள், கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் கார்த்திக் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை மற்றும் புறநகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் 350 அடுக்குமாடி குடியிருப்புகளை சோதனை செய்யும் பணி தொடங்கியது. இதற்காக அமைக்கப்பட்ட 18 குழுக்களில் 54 அதிகாரிகள் இடம் பெற்று இருந்தனர். இந்த குழுக்கள் வியாழக்கிழமை பல்வேறு பகுதிகளுக்கு தனித்தனியாக பிரிந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அண்ணாநகர், நுங்கம்பாக்கம், தாம்பரம், பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் சென்று கட்டிடங்களை தீவிர சோதனையிட்டனர். நேற்று ஒரு நாளில் மட்டும் பல அடுக்குமாடி கட்டிடங்களில் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
விளக்கம் கேட்ட அதிகாரிகள்
16 சிறப்பு பிரிவு கட்டிடங்களிலும் (4 மாடி கட்டிடங்கள்) ஆய்வு மேற்கொண்டனர். இதில் சிலர் சி.எம்.டி.ஏ. அளித்த விதிமுறைக்கு மாறாக கட்டிடங்கள் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் விதிமீறல் குறித்து அதிகாரிகள் விளக்கம் கேட்டனர்.
விதிமீறல் கட்டிடங்கள்
ஒரு சில கட்டிடங்களில் சி.எம்.டி.ஏ. குறிப்பிட்ட அளவைவிட பெரிய அளவில் தூண்கள் எழுப்பபட்டு இருப்பதை அதிகாரிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். விதிமுறைகளுக்கு மாறாக கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
24 குடியிருப்புகளில் ஆய்வு
சி.எம்.டி.ஏ. அதிகாரிகளின் நடவடிக்கை இன்று 2-வது நாளாக தொடர்ந்தது. ஒரே நாளில் 24 இடங்களுக்கு சென்று சோதனை நடத்தினர்.தரமான கட்டுமானப்பணி, உறுதித்தன்மை கொண்ட கட்டிடங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது. அதே சமயம் பெரும்பாலான கட்டிடங்கள் சி.எம்.டி.ஏ. நிர்ணயித்த அளவைவிட கூடுதலாக கட்டப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டன.
கட்டுமானத்துறையினர் கலக்கம்
சி.எம்.டி.ஏ. அதிகாரிகளின் அதிரடி சோதனையை தொடர்ந்து சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவோர், விற்பனைக்காக கட்டுபவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.