சென்னை எல்லை விரிவாக்கப் பணியை சிஎம்டிஏ தொடங்கி விட்டது - உடுமலை ராதாகிருஷ்ணன்
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் எல்லை விரிவாக்கப் பணிகள் தொடங்கியுள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வின் எல்லை பரப்பை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளதாக வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய 1,189 சதுர கி.மீ. பரப்பில், சென்னை பெருநகர் பகுதி உள்ளது. இதுவே, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வின் எல்லையாக உள்ளது. 'இதை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், வேலுார் மாவட்டத்தில், அரக்கோணம் தாலுகாவை உள்ளடக்கிய, 8,878 சதுர கி.மீ. ஆக விரிவாக்கம் செய்யப்படும்' என சட்டசபையில் தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து, விரிவாக்க திட்டத்தை செயல்படுத்தும் ஆலோசனை பணிகளை முடிந்துள்ளதாகவும் அதற்கான பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளதாகவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். முதற்கட்டமாக, மும்பை பெருநகர மண்டல வளர்ச்சி குழும அதிகாரிகளை வரவழைத்து கருத்து கேட்கப்பட்டள்ளது. விரைவில் பணிகள் முடிந்து சென்னை பெருநகர் வளர்ச்சி குழும எல்லை 4 மண்டலங்களாக பிரிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சென்னையில் தொடர்ந்து மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் சென்னை மாநகரின் வளர்ச்சியை சமநிலைப்படுத்த புறநகர்ப் பகுதிகள் உருவாக்கப்பட்டன. இதன் அடுத்த கட்டமாகவே ஒருங்கிணைந்த நகர வளர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக எல்லை விரிவாக்கப் பணி தொடங்கியுள்ளது.