சென்னை மெட்ரோவுடன் கைகோர்க்கும் ஓலா...11 ஸ்டேஷன்களில் கார் புக்கிங் வசதி
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் கைகோர்த்து ஓலா நிறுவனம் 11 இடங்களில் கார் புக் செய்யும் வசதி மையங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.
சென்னை : பயணிகளின் வசதிக்காக ஓலா கார் புக் செய்யும் மையங்களை மெட்ரோ ரயில் நிலையங்களிலேயே அமைக்க இரண்டு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்துள்ளன.
அலுவலகம் மற்றும் வெளியிடங்களுக்கு செல்வோரின் மிகப்பெரிய தேவையாக மாறியுள்ளது கேப் சர்வீஸ் என்று சொல்லப்படும் வாடகைக் கார்களின் பயன்பாடு. கார்ப்பரேட் நிறுவனமான ஓலா ஓட்டுனர்களை நியமித்தும், சொந்த கார் வைத்திருக்கும் ஓட்டுனர்களைக் கொண்டும் கேப் சர்வீஸ் வழங்கி வருகிறது.
இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து எளிமையான முறையில் கார் புக் செய்து பயணிக்கும் வசதியை ஏற்படுத்த கை கோர்த்துள்ளது. இதன்படி சென்னையில் சின்னமலை, கிண்டி, அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, திருமங்கலம், அண்ணா நகர் கிழக்கு, நேரு பூங்கா, ஆலந்தூர், செயின்ட் தாமஸ் மவுண்ட் உள்ளிட் 11 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஓலா புக் செய்யும் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இணைப்பு போக்குவரத்து வசதிக்காக
சென்னை மெட்ரோ ரயிலைப் பயன்படுத்துவோருக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது ஒரு ஸ்டேஷனில் இருந்து அவர்கள் தாங்கள் செல்ல விரும்பும் இடத்திற்கான வாகன வசதி இல்லாததே. நூற்றுக்கணக்காண பயணிகள் சென்னை மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர், ஆனால் இறங்குமிடத்தில் கிடைக்கும் வாகன தேவை என்பது சவாலானதாக இருக்கிறது. தற்போது இந்தக் குறையை போக்கும் வகையில் ஓலா முன் வந்துள்ளது பாராட்டிற்குரியது என்று சென்னை மெட்ரோ ரயி ல் நிர்வாக, செயல்பாட்டுப் பிரிவு இயக்குனர் நரசிம் பிரசாத் கூறியுள்ளார்.
போக்குவரத்தின் முன்னோடி
ஓலா நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவு மூத்த இயக்குனர் ஆனந்த் சுப்ரமணியன், இந்த ஒப்பந்தம் குறித்து பேசுகையில் "மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து நாங்கள் இந்தியாவின் போக்குவரத்து பிரச்னைகளுக்கு தீர்வு காண முயல்கிறோம். மெட்ரோ ரயில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் லட்சக்கணக்கான மக்கள் இதனை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்களுக்கு இறங்குமிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வாகனம் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக உள்ளது".
கஷ்டங்கள் தீரும்
எனவே, சென்னை மெட்ரோ ரயிலுடன் கைகோர்த்து போட்டுள்ள இந்த ஒப்பந்தம், பயணத்தை எளிமையாகவும், நம்பகத் தன்மையானதாகவும் மாற்றும். மேலும் நகரத்து மக்களிடையே போக்குவரத்து குறித்து இருக்கும் அச்சங்களும் தீர்க்கப்படும் என்றும் ஆனந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
பிற நகரங்களிலும்
கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட மெட்ரோ சிட்டிகளிலும் ஓலா இதே போன்று மெட்ரோ ரயில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. நாட்டின் பிற நகரங்களிலும் இதே போன்றதொரு ஒப்பந்தங்களை போட திட்டமிட்டுள்ளதாகவும் ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.