கூட்டுறவு சங்கத் தேர்தலை முழுமையாக ரத்து செய்யுங்கள்.. மார்க்சிஸ்ட் கோரிக்கை
கூட்டுறவு சங்கத் தேர்தலை முழுமையாக ரத்து செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கோரிக்கை எழுப்பியுள்ளார்.
சென்னை : மோசடிகளோடும் பல வித முறைகேடுகளோடும் நடக்கும் கூட்டுறவு சங்கத் தேர்தலை முழுமையாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் நடைபெறும் கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் நியாயமான முறையில் நடக்கவில்லை.
வேட்புமனுத்தாக்கலில் இருந்தே முறைகேடுகளும், மோசடித்தனங்களும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. ஆனால், அந்தப் புகார்கள் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
மேலும், இன்று காலையில் மதுரை கீழையூர், உறங்கான்பட்டி கூட்டுறவு தேர்தல்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது தேனியில் ராமலிங்கபுரம் கிராம வேளாண்மை கூட்டுறவு சங்கத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை நியாயமாக நடத்த வேண்டிய அதிகாரிகளும் அதைச் செயல்படுத்தவில்லை. எனவே, தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கத் தேர்தல்களை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்று பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.