பெண்களுக்கு மட்டுமல்ல.. ஆண்களுக்கும் கூட விதம் விதமான டிரஸ்களை அள்ளித் தரும் கோ ஆப்டெக்ஸ்
சென்னை: காட்டன் புடவையை அதிகம் விரும்பும் பெண்களுக்காகவே கோ ஆப்டெக்ஸ் இந்த ஆண்டு தீபாவளிக்காக இல்லத்தரசிகளையும், இளம் பெண்களையும் கவரும் வகையில் இயற்கை வண்ணங்களால் உற்பத்தி செய்யப்பட்ட ஆர்கானிக் காட்டன் புடவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு தீபாவளிக்கு 200-க்கும் அதிகமான வெவ்வேறு டிசைன்களில் தயாரிக்கப்பட்ட பட்டு சேலைகள்
மற்றும் 250 விதவிதமான டிசைன்களில் தயாரிக்கப்பட்ட கைத்தரி மற்றும் காட்டன் புடவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதேபோல், ஜக்காட், ஜங்கலா வர்க், மெகமம், கோரா, திருபுவனம், கோரை நாடு போன்ற ரகங்களில் காட்டன் புடவைகள் விற்பனைக்கு உள்ளது. அதேசமயம், ஆண்களுக்கும் கூட சட்டை ரகங்களை அது அறிமுகப்படுத்தியுள்ளது.
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்
தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1935-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 80 ஆண்டு காலமாக நெசவாளர்களின் நலனில் அக்கறை கொண்டு,
வாடிக்கையாளர்களின் பேராதரவுடன் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் இரசனையினையும், அவசிய தேவைகளையும் அவ்வப்போது அறிந்து தேவைக்கேற்ப புதிய இரகங்களையும், வடிவமைப்புகளையும் உருவாக்கி, சந்தையில் ஏற்படும் போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் புதிய உத்திகளும், முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆர்கானிக் சேலைகள்:
ஆர்கானிக் சேலைகள் என்றால் முழுக்க முழுக்க இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. புடவைகளுக்கான வண்ணங்கள் இயற்கை முறையில் ரோஜா, செம்பருத்தி போன்ற பல்வேறு பூ வகைகளிடம் இருந்தும், வெங்காயம், பீட்ரூட் போன்ற காய்கறிகள், இது தவிர செடிகள், கொடிகள், இலைகள், மரப்பட்டைகள் மற்றும் மரக்கூழ் போன்றவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரிக்கப்பட்டு இந்த சேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உடல் நலத்திற்கும், சுற்றுச்சுழலுக்கும் தீங்கு விளைவிக்கும் ரசாயண உரங்கள் இல்லாமல் இயற்கை முறையில் பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.
கோ ஆப்டெக்ஸ் சேலைனாலே கொள்ளை பிரியம்
இது குறித்து வாடிக்கையாளர் ஒருவர் கூறும்போது, ஆர்கானிக் சேலைகள் புடவை கலெக்சன் மிகவும் அருமையாக உள்ளது. நான் கோ ஆப்டெக்சில் பல வருடங்களுக்கு முன்பு வாங்கிய பட்டுப்புடவைகள் இன்னும் அப்படியே இருக்கின்றன. கோ-ஆப்டெக்ஸ் சேலைகள் என்றால் எனக்கு அவ்வளவு பிரியம். தேவை இல்லை என்றாலும் கூட வருடத்தில் எப்படியும் 5 புடவைகள் வாங்கி விடுவேன். கோ-ஆப்டெக்ஸ் பட்டுப் புடவைகள் என்றால் எனக்கு அவ்வளவு இஷ்டம் என்றார்.
ஆண்களுக்கும் லினேன் சர்ட்ஸ்
இது குறித்து கோ ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர், வெங்கடேஷ் கூறுகையில், குறிப்பாக இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு வரவாக ஆர்கானிக் சாஃப்ட் சில்க் சேலைகள், காஞ்சிபுரத்தில் பிரத்யேக டிசைன்களில் உருவாக்கப்பட்ட பட்டு சேலைகள், ஆரணி டெம்ப்புள் பார்டர் சேலைகளும், அதே போல ஆண்களுக்கென்று லினேன் சர்ட்ஸ், லினேன் பை லினேன், லினேன் பை காட்டன் போன்ற புது வகையான சட்டைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.
என்ன விலை?
தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு, கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் தங்களது விற்பனை நிலையங்களில் கைத்தறி ராகங்களுக்கு 30 சதவிகித தள்ளுபடியுடன்
விற்பனையை துவங்கியுள்ளது. இந்த சேலைகளின் விலை ரூபாய் 1200-ல் இருந்து 2700 வரை விற்பனை செய்யப்படுகிறது.குர்தீஸ் சுடிதார்கள், 500 முதல், 600 ரூபாயிலும், மென்பட்டு புடவைகள், 4,000 முதல், 10,000 ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்கு உள்ளன.
சிறப்பு விற்பனை கண்காட்சி
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் 11 மண்டலங்களில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை கடைகளில் சிறப்பு விற்பனை கண்காட்சி தொடங்கியுள்ளது.
வெளி மாநிலங்களில் மும்பை, கொல்கத்தா, புனே உள்ளிட்ட 15 நகரங்களிலும் சிறப்பு கண்காட்சி அக்டோபர் 1 முதல் நவம்பர் 19 வரை நடத்தப்படுகிறது.