மகளிர் தினத்தில் தாவணி தினம் கொண்டாடும் கோ.ஆப்டெக்ஸ்… சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி
சென்னை: வேட்டி தினத்துக்கு பொதுமக்களிடம் இருந்து வந்த வரவேற்பு, வாழ்த்துகளைத் தொடர்ந்து தாவணி தினம் கொண்டாட தீர்மானித்திருக்கிறது.
கோ-ஆப்டெக்ஸ். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியை அனைவரையும் அணியச் செய்யும் விதமாகவும் கைத்தறி நெசவாளர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் வேட்டி தினம் அறிவித்தார் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் உ.சகாயம்.
வேட்டி தினத்தை அறிவித்து இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்கியதுபோல் அடுத்ததாக தாவணி தினம் அறிவித்து இளம் பெண்கள் இடையே கைத்தறிப் புரட்சியை உண்டாக்கப் போகிறார் சகாயம் ஐ.ஏ.எஸ்.
ஏற்கெனவே பள்ளி, கல்லூரி மாணவிகள் பண்டிகை மற்றும் முக்கிய நாட்களில் மட்டும் தாவணி அணிந்து வருகின்றனர்.
இனி இதை வழக்கத்துக்குக் கொண்டுவரும் வகையிலும், நமது பாரம்பரிய உடை மறக்கடிக்கப்படாமல் இருக்கவும் வாரத்துக்கு ஒரு நாள் தாவணி அணிந்து வருவது குறித்து பள்ளி, கல்லூரிகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
வேட்டிக்கு வரவேற்பு
வேட்டி தினத்திற்கு பொதுமக்களிடம் இருந்தும் தொண்டு நிறுவனங்களிடம் இருந்தும் அமோக வரவேற்பு கிடைத்தது. சகாயத்தின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் முழுவதும் அரசு, தனியார் அலுவலகங்கள், கல்லூரிகளில் வேட்டி தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பல ரக வேட்டிகள்
வேட்டி தினத்துக்காக இளவட்ட வேட்டி, நாட்டாமை வேட்டி, ஜமீன் வேட்டி, வாசனை வேட்டி (மூன்று சலவை வரை குறிப்பிட்ட மலரின் வாசனை இருக்கும்), காந்தி வேட்டி என நூறு விதமான வேட்டி ரகங்களை அறிமுகப்படுத்தியது கோ-ஆப்டெக்ஸ்.
வேட்டிக்கு மாறிய சகாயம்
வேட்டி தினத்தை கொண்டாடும் விதமாக சகாயம் ஐ.ஏ.எஸ் தன் சகாக்களுடன் வேட்டி அணிந்து வந்தார். சில இடங்களில் இனி மாதத்தில் இரண்டு நாட்கள் வேட்டி அணிந்து வருவது என உறுதிப்பாடும் எடுக்கப்பட்டுள்ளது. வேட்டி தினத்துக்காக மட்டுமே சுமார் 75 ஆயிரம் வேட்டிகள் விற்பனையானது.
தாவணி தினம்
வேட்டி தினக் கொண்டாட்டத்தை தொடர்ந்து உலக மகளிர் தினமான, மார்ச், 8ம் தேதி, 'தாவணி தினம்' கொண்டாட, கோ-ஆப்டெக்ஸ், முடிவு செய்துள்ளது.
பாரம்பரியம் காக்க
நமது பாரம்பரிய உடையான தாவணியை மீண்டும் பிரபலப்படுத்தும் வகையில் தாவணி தினம் கொண்டாடுகிறது கோ.ஆப்டெக்ஸ். பெண்களை கவரும் வகையில் நல்ல டிசைன்கள், மேட்சிங் பாவாடை தாவணி செட் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது கண்டிப்பாக பெண்களை கவரும் வகையில் இருக்கும் என்கிறார் சகாயம் ஐ.ஏ.எஸ்.
சுபமுகூர்த்த புடவைகள்
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை மையங்களில் சுபமுகூர்த்த பட்டுப்புடவைகள் 15 சதவீதம்தான் விற்பனை செய்யப்படுகின்றன. அதை 3 மடங்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, மணப்பெண், மணமகன் ஆகியோரது புகைப்படங்களைப் பெற்றுக் கொண்டு, அவர்கள் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட பட்டுப்புடவைகள் நெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
வீடு வீடாக திருமணப் புடவைகள்
திருமண மண்டபங்களைத் தொடர்பு கொண்டு, யார், யார் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த விவரங்களை சேகரித்து, வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கேச் சென்று அவரவர் ரசனைக்கேற்ற டிசைன்களில் சுபமுகூர்த்த பட்டுப் புடவைகள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சரித்திர புடவைகள்
சரித்ரா என்ற திட்டம் இப்போது உள்ளது. இத்திட்டத்தின்படி நாட்டில் உள்ள சரித்திர புகழ்பெற்ற சித்தனவாசல் உள்ளிட்ட அரிய நினைவுச் சின்னங்கள் வடிவமைப்பில் பட்டுப்புடவைகள் தயாரிக்க திட்டமிடப்பட்டது.
எண்ணற்ற டிசைன்கள்
இப்போது அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் உள்ளது. மேலும் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தும் வகையில் வடிவமைப்புக் கூடம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இளைஞர்கள் பல எண்ணற்ற டிசைன்களை உருவாக்கி வருகின்றனர். இதன் மூலம் இதுவரை 200-க்கும் மேற்பட்ட புதிய வகை டிசைன் பட்டுப்புடவைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஆயிரம் டிசைன்கள்
இப்போது "சூப்பர் 1000' என்ற திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தனியாருக்கு இணையாக கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 1000-க்கும் மேற்பட்ட டிசைன்களில் பட்டுப்புடவைகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நெசவாளர்களுக்கு வேலை
இதன் மூலம் தீபாவளி, பொங்கல் காலங்களில் மட்டுமே நெசவாளர்களுக்கு வேலை இருக்கும் என்ற நிலை மாறி ஆண்டு முழுவதும் வேலை கொடுக்க பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன என்றார் சகாயம்.