தூத்துக்குடியில் நிலக்கரி தட்டுபாடு எதிரொலி : அனல் மின்நிலையத்தின் நான்கு யூனிட்டுகள் முடக்கம்
தூத்துக்குடி மாவட்ட அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு எதிரொலியால் உற்பத்தி பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
தூத்துக்குடி : அனல் மின் நிலையத்தில் நான்கு யூனிட்டுகளிலும் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மின் பகிர்மானம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழைமை வாய்ந்த அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் செயல்பட்டு வருகின்றன. ஒரூ யூனிட்டில் 210 மெகா வாட் வீதம் 5 யூனிட்டிலும் சேர்ந்து 1050 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்த அனல் மின் நிலையம் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி செய்யமுடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் அதிகாரிகள் சிலர் ஒப்பந்தக்காரர்களுக்கு உதவும் வகையில் அடிக்கடி பழுது ஏற்படுவதாக கூறி கணக்கு காட்டி போலி ரசீது மூலம் பணம் சம்பாதித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதற்கிடையே தற்போது அனல் மின் நிலையத்தில் உற்பத்திக்கு தேவையான அளவு நிலக்கரி இருப்பு இல்லை. நிலக்கரி இல்லாததால் கடைசி யூனிட் மட்டுமே தற்போது செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மற்ற நான்கு யூனிட்டுகளும் இயக்கப்படாததால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏறத்தாழ 40 ஆயிரம் டன் மட்டுமே நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இது இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே தாக்கு பிடிக்கும். அதன் பின் அனைத்து யூனிட்டுகளும் இயங்காது என விபரம் தெரிந்த அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதுவும் முடிந்துவிட்டால் மின் உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுவிடும் என்கிற நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்கிற கேள்வி எழுந்துள்ளது.