டோர்னியர் விமானத்தை தேடும் பணியில் தொய்வு! வருகிறது அதி நவீன ரிலையன்ஸ் கப்பல்!
சென்னை : காணாமல் போன டோர்னியர் விமானத்தை தேடும் பணியில் அதி நவீன ரிமோட் சென்சார் கொண்ட ரிலையன்ஸ் கப்பல் வந்து கொண்டிருப்பதாக கடலோர காவல்படை கிழக்கு மண்டல ஐ.ஜி சர்மா தெரிவித்துள்ளார்.
சென்னை கடற்கரையில் உள்ள கிழக்கு மண்டல கடலோர காவல்படை தலைமையகத்தில் ஐ.ஜி சர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், கடந்த 8-ம் தேதி காணாமல் போன டோர்னியர் விமானத்தை தேடும் பணி முழுவீச்சில் தொடர்வதாக தெரிவித்தார்.
சிதம்பரத்தில் இருந்து 60 நாட்டிகல் மைல் கடல் பகுதியில் இருந்து சிக்னல் கிடைப்பதாகவும், ஆனால் அந்த சிக்னல் தெளிவாக இல்லை என்றும் அவர் கூறினார்.
விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட சாகர் நிதி கப்பல் தேடும் பணியை நேற்றுடன் நிறுத்திக் கொண்டதாக தெரிவித்த சர்மா, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அதி நவீன ரிமோட் சென்சார் வசதி கொண்ட கப்பல் வந்து கொண்டிருப்பதாகவும், நாளை (19-06-2015) முதல் அக்கப்பல் தேடும் பணியை தொடங்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
டோர்னியர் விமானத்தை தேடும் பணியில் வெளிநாட்டு உதவியை நாடும் எண்ணம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மாயமான மூன்று வீரர்களின் மனைவியர் விமானத்தை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிருப்தி அடையவில்லை என்றும், இது குறித்து பிரதமர் அலுவலகம் கடலோர காவல் படையிடம் நேரடியாக விளக்கம் கேட்கவில்லை என்றும் ஐ.ஜி. சர்மா விளக்கம் அளித்தார்.