மீனவர்களை தேடும் எல்லை 400 நாட்டிகல் மைல் வரை விரிவாக்கம்... கடலோர காவற்படை தகவல்!
ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடலோர காவற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : ஓகி புயல் காரணமாக காணாமல் போன கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடலோர காவற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மீனவர்களை தேடும் எல்லையானது 400 நாட்டிகல் மைல் வரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கடலோர காவற்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னையில் கடலோர காவற்படை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர் கூறியதாவது : கன்னியாகுமரியில் இருந்து 1500 கிலோ மீட்டர் அதாவது மும்பை வரையிலும், கடலோர பகுதியில் இருந்து 199 கி.மீ வரை கோவா, கர்நாடகா தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஆகாய விமானம் மூலம் 550 கி.மீ வரை தேடும் பணி நடக்கிறது.
ஆகாய விமானங்கள் மூலம் படகுகள் எங்கு இருக்கின்றன என்று முதலில் கண்டறியப்படுகின்றன. படகுகள் நிற்பதாக தகவல் வந்தால் அந்த திசையில் உடனடியாக கப்பல் சென்று அவர்களை மீட்க உதவி செய்கிறது. மற்றொருபுறம் போக்குவரத்தில் ஈடுபட்டிருக்கும் கப்பல்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. வழியில் யாரேனும் படகில் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும், அவர்களுக்கு உதவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காணாமல் போன மீனவர்களை தேடும் பணி 7 நாட்களாக நடக்கிறது. இலங்கை, மாலத்தீவுகளிலும் தகவல் கொடுத்துள்ளோ. இலங்கை கடல் பகுதிக்கு எந்த மீனவரும் வரவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களை தேடும் பணியில் 12 போர்க்கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. அரக்கோணத்தில் இருந்து போர் விமானம் ஒன்றும் மீனவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவா, மஹாராஷ்டிரா பகுதிகளில் 139 படகுகளில் 1602 மீனவர்கள் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்களை திரும்ப அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் இந்திய கடற்படை, கடலோர காவற்படை மற்றும் இந்திய விமானப்படை சேர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் கிட்டத்தட்ட 672 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர், இவர்களில் 278 மீனவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
400 நாட்டிகல் மைல் வரை சென்று தேடுதல் வேட்டையை தொடர்ந்து நடத்தி வருகிறோம். அடுத்தும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வர உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் ஆந்திராவை ஒட்டியுள்ள கடல்பகுதியில் உள்ள மீனவர்களை கரை திரும்புமாறும் கேட்டுக்கொண்டுள்ளோம். எச்சரிக்கையை திரும்பப்பெறும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர்.