வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய மர்ம படகு... இலங்கையில் இருந்து வந்ததா?
நாகை அருகே கரை ஒதுங்கிய மர்ம படகு குறித்து கடலோர காவல் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம் : நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மணியன் தீவு என்ற பகுதியில் மர்மமான முறையில் படகு ஒன்று நின்று கொண்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் படகில் இலங்கையில் இருந்து போதைப் பொருள்களை கடத்தி கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று கடலோர காவல் படையினர் சந்தேகிக்கின்றனர்.
இலங்கையில் இருந்து நாகை மாவட்டம் வேதாரண்யத்துக்கு படகு மூலம் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார் வந்த வண்ணம் உள்ளன. இதனால் கடலோர காவல் படையினர் கடலில் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் கடத்தல் கும்பல் தீவிர கண்காணிப்பையும் மீறி படகு மூலம் வேதாரண்யத்துக்கு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வேதாரண்யம் அருகே மணியன் தீவில் மாலை 6 மணியளவில் ஒரு பைபர் படகு கரை ஒதுங்கி நின்றது. நீண்ட நேரமாக படகு நின்றதால் அங்கிருந்தவர்கள் சந்தேகம் அடைந்தனர்.
இதனையடுத்து அந்தப் படகில் ஏறி அந்தப் பகுதியினர் சோதனையிட்டனர். படகில் என்ஜீன் இல்லாமல் இருப்பதை கண்டு திடுக்கிட்டனர். இதைதொடர்ந்து மர்ம படகு குறித்து கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து மர்ம படகை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதில் பைபர் படகு இலங்கையை சேர்ந்தது என்றும், போதை பொருள் கடத்தல் கும்பல் வந்திருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர். பின்னர் தீவு அருகே உள்ள காட்டில் கடலோர காவல் படையினர் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு ஒரு புதரில் படகு என்ஜீன் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த என்ஜீன் 75 எச்.பி. சக்தி கொண்டதாகும்.
பின்னர் சிறிது தூரம் தள்ளி பார்வையிட்ட போது அங்கு மண்எண்ணெய் கேன்களும் இருந்தன. இதையடுத்து என்ஜீன், மண்எண்ணெய் கேனை கைப்பற்றி மர்ம கும்பல் பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேதாரண்யம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய மர்ம படகால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.