இந்திய கடல் எல்லைக்குள் புகுந்த இலங்கையின் மினி சொகுசு கப்பல் .. 4 பேர் சிக்கினர்
இலங்கையில் இருந்து சொகுசு பொருட்களின் மினி கப்பல் இந்திய எல்லைக்குள் புகுந்தது, கடலோர காவல்படையினர் அதனை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
கன்னியாகுமரி: இலங்கையில் இருந்து சொகுசு பொருட்களின் மினி கப்பல் கன்னியாகுமரி கடற் பகுதிக்குள் வந்த 4 பேரை கடலோர காவல் துறையினர் விரட்டி பிடித்தனர்.
அந்த கப்பலில் இருந்தவர்களை அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன் பிடி துறைமுகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அந்த கப்பலை கோவா மாநிலத்திற்கு கொண்டு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொகுசு கப்பல்
இலங்கை கடப்பா மாவட்டம் நீற்குளம்பு பகுதியில் இருந்து கடந்த 30ம் தேதி சுமார் ஒரு கோடியே ஐம்பது லட்சம் செலவில் செய்த சுற்றுலா சொகுசு படகினை கோவாவில் உள்ள காட்மா டாட்டா மரைன் என்ற தனியார் நிறுவனத்தில் ஒப்படைக்க ஜூட் பெர்னாண்டஸ்(ஓட்டுனர் ), சுதர்சன் பெர்னாண்டஸ் ,காம்னி ரத்நாயக் மற்றும் பிரசாத் பெர்னாண்டஸ் ஆகிய நான்கு பேரும் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.
இந்திய கடல் எல்லை
இந்நிலையில் படகானது கன்னியாகுமரி கடல் பகுதியில் நுழைந்த போது குமரி மாவட்ட கடலோர காவல் படையினர் படகினை கைப்பற்றி கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன் பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.
அதிகாரிகள் விசாரணை
கடலோர காவல் படை ,கியு பிரிவு போலீசார் உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து படகில் வந்த நான்கு பேரிடமும் விசாரணை நடத்தினர். இவர்கள் டீசல் நிரப்புவதற்காக குமரி கடல் பகுதியில் நுழைந்ததாக தெரிவித்துள்ளனர்.
ஆவணங்கள் சரிபார்ப்பு
கப்பலில் வந்தவர்கள் சரியான ஆவணங்கள் வைத்துள்ளனரா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . மேலும் கடத்தல் கும்பலை சார்ந்தவர்களா என்றும் சுங்க துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் ஆவணங்கள் சரி பார்த்த பின்னர் இவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர் .
சீனா கப்பல்
கடந்த வாரம் இந்திய கடற்பரப்புக்குள் சீனா கப்பல் ஒன்று நுழைய முயற்சித்தது. இலங்கை கடற்படையின் பாதுகாப்புடன் இந்த கப்பல் நுழைய முயற்சித்திருக்கிறது. இதையடுத்து இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் சீனா கப்பலை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இருதரப்பு மோதலுக்குப் பின்னர் சீனா கப்பல் விரட்டியடிக்கப்பட்டது.
இந்திய கடற்படை
இந்த நிலையில் இலங்கையில் இருந்து வந்த மினி சொகுசு கப்பல் இந்திய கடலோர எல்லையில் ஊடுருவியுள்ளது. தமிழக மீனவர்களின் படகுகள் எல்லை தாண்டியதாக கூறி சுட்டுக்கொள்கின்றனர். படகுகளை பறிமுதல் செய்கின்றனர். ஆனால் இலங்கையில் வரும் கப்பல், மீனவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.