பறந்து பறந்து சண்டை போட்ட சேவல்கள்.. பாய்ந்து வந்து குத்திய கத்திகள்.. 2 மாணவர்கள் கவலைக்கிடம்
திருப்பூரில் சேவல் சண்டை சட்டவிரோதமாக நடைபெற்றதில் 2 பேர் காயமடைந்தனர்.
திருப்பூர்: "ஒரு செயல் செய்யக்கூடாது, அது தவறு... அதனால் மக்களின் உயிருக்கு ஆபத்து" என்று கோர்ட் ஆணித்தரமாக சொல்லி தீர்ப்பு வழங்கினாலும், சிலர் அதை வேண்டுமென்றே எதிர்த்து வம்படியாக செய்தே வருகிறார்கள். அப்படி செய்யும்போது, மீண்டும் அவர்களே பாதிக்கப்பட்டு அம்போவென்று நிற்கிறார்கள். அதில் ஒன்றுதான் சேவல் சண்டை.
இந்த சேவல் சண்டை தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று எனப்படுகிறது. தமிழரின் கலாச்சாரமாக உள்ளது. இன்றைக்கும் பொங்கல் நாட்களில் இந்த விளையாட்டு மதுரை, பட்டுக்கோட்டை, திருச்சி, அரவக்குறிச்சி, தஞ்சாவூர், கரூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட இடங்களில் இந்த சேவல் சண்டை போட்டி நடைபெற்று அந்த ஊரே களை கட்டும். ஆடுகளம் படம் எடுக்குமளவுக்கு இந்த சேவல் சண்டை பிரபலம்தான்.
சேவலின் காலில் கத்தி
ஆனால், இந்த போட்டியை நேர்மையாகவும், ஆபத்தில்லாமலும் விளையாடினால் யார்தான் கேட்க போகிறார்கள்? யார்தான் தடை சொல்லப்போகிறார்கள்? சிலர் சேவலின் காலில் கத்தியை கட்டி விடுவது, அதிலும் விஷம் தடவிய கத்திகளை கட்டி விடுவது, சேவலின் வாய்க்குள் சாராயம் ஊற்றிவிடுவது, என செய்ய துவங்கி, அதனால் 2 பேர் உயிரிழந்து, அந்த விவகாரம் கோர்ட் வரை சென்று, கடைசியில் இந்த விளையாட்டே வேண்டாம் என்று ஒரு தடையும் போட்டுவிட்டது.
சேவல் போட்டி
அப்போதாவது இந்த போட்டியை விட்டார்களா என்றால் இல்லை, நேற்றும் சேவல் போட்டியை விளையாடி வம்பில் மாட்டி உள்ளனர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த குண்டடம் சாராயகாட்டு தோட்டம் என்ற இடம் உள்ளது. இங்குதான் இந்த சேவல் சண்டை நடத்தியிருக்கிறார்கள். வழக்கம்போல் சேவலின் காலில் கூர்மையான கத்தி. அந்த சேவல் சும்மா பறந்து பறந்து தாறுமாறாக விளையாடியது.
மருத்துவமனையில் மாணவர்கள்
அப்போது, இந்த விளையாட்டை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த 2 பேரின் மீது சேவலின் காலில் கட்டப்பட்ட கூர்மையான கத்தி பாய்ந்தது. ரத்தம் பொலபொலவென கொட்டியது. அவர்கள் அப்பாஸ், பரமசிவன். இருவரும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்கள். பலத்த காயம் ஏற்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 2 பேருமே ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டனர்.
காவல்துறை தடுக்கலாமே?
அங்கு தீவிர சிகிச்சையில் மாணவர்கள் உள்ளனர். ஒரு விளையாட்டை இப்படியா விளையாடுவது? சட்டவிரோதமாக விளையாடியதே தவறு, அதில் உயிரோடு விளையாடும் போட்டியை இனி நடத்தலாமா? இப்படி தடையை மீறி சேவல் போட்டி எங்கு நடந்தாலும், அதை காவல்துறை தயவுசெய்து கண்டறிந்து தடுக்க முன்வரவேண்டும்.