தடையை மீறி சேவல் சண்டை.. திருச்சியில் பரபரப்பு
தடையை மீறி சேவல் சண்டை திருச்சியில் நடைபெற்றது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சேவல் சண்டையையும் நடைபெற்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி: ஜல்லிக்கட்டு மீதாத தடையை நீக்க வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், திருச்சியில் சேவல் சண்டை நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வாக தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இதனை நடத்த முடியாமல் உச்ச நீதிமன்றம், மத்திய அரசு ஆகியவை தடை விதித்துள்ளன.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுத்துள்ளது. மேலும், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவிகள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, எதிர்ப்பின் இன்னொரு வடிவமாக, திருச்சியை அடுத்துள்ள உறையூரில் சேவல் சண்டை தடையை மீறி நடத்தப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி, சேவல் சண்டை உள்ளிட்டவை நடக்கிறதா என்பதை கண்காணிக்க, போலீசாருக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், பொங்கல் பண்டிகையின் திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, தாராபுரம், காங்கயம், பல்லடம் மற்றும் உடுமலை பகுதிகளில், சில கிராமப் பகுதிகளில் சேவல் சண்டை நிகழ்வுகள் பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதிகளில் சேவல் சண்டை நடைபெறுகிறதா என்று கண்காணிக்க, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.