வறட்சி எதிரொலி - கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய் விலை கடும் உயர்வு
நாகர்கோவிலில் வறட்சி நிலவு வருவதால் தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
நாகர்கோவில்: நாகர்கோவிலில் வறட்சி நிலவு வருவதால் தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் தேங்காய் வாங்கவே அச்சப்பட்டு வருகின்றனர்.
நாகர்கோவில் வடசேரி மற்றும் அப்டா மார்க்கெட்டுகளில் இன்று காலை ஒரு கிலோ தேங்காய் விலை ரூ.28 முதல் ரூ.29 வரை விற்கப்பட்டது. குமரி மாவட்ட மார்க்கெட்டுகளில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் தேங்காய் ஏற்றுமதி செய்யப்படும்.
இங்கேயே தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் வெளியூருக்கு ஏற்றுமதி செய்யும் தேங்காயின் அளவும் கணிசமாக குறைந்து உள்ளது. இது பற்றி தேங்காய் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது, குமரி மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்ய வேண்டும். கருகிய தென்னை மரங்கள் மீண்டும் செழிப்புடன் வளர வேண்டும். அதன் உற்பத்தியும் அதிகரிக்க வேண்டும். அதன்பின்புதான் குமரியில் தேங்காய் விலை குறையும் வாய்ப்பு ஏற்படும்.
குமரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தேங்காய் ரூ.14 முதல் ரூ.16 வரை விற்கப்பட்டது. அதன்பின்பு சிறிது சிறிதாக உயர்ந்து கிலோ ரூ. 32 வரை சென்றது. அதன்பிறகு படிப்படியாக குறைந்து ரூ.24 வரை வந்தது.
இப்போது மீண்டும் உயர்ந்து உள்ளது. மழை பெய்யும் பட்சத்தில் இந்த விலை மீண்டும் குறையும் என்று எதிர்ப்பார்க்கிறோம். இவ்வாறு தேங்காய் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.