காபி கொடுக்காத ஹோட்டல் மீது 'கேஸ்' போட்ட ராமசாமி.. அந்தக் காலத்து தீண்டாமை.. ஒரு பிளாஷ்பேக்!
சென்னை: டீ, காபி.. இதெல்லாம் இன்று சர்வ சாதாரணமான விஷயங்கள்.. ஆனால் ஒரு காலத்தில் இதிலும் தீண்டாமை இரண்டறக் கலந்திருந்தது என்பது ஒரு ஆச்சரியத்துக்குரிய விஷயம். இது இரட்டை டம்பளர் பிரச்சினை அல்ல.. மாறாக, டீ, காபியே கூட அந்தக் காலத்தில் ஜாதி ரீதியாக பிரித்து வைக்கப்பட்டிருந்தது என்பதுதான் இதில் முக்கியமானது.
"டீ பார் டேவிட்" (Tea for David) என்ற ஒரு கருத்தரங்கு சென்னையில் நடந்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல வரலாற்றியல் பேராசிரியரான டேவிட் வாஷ்ப்ரூக் என்பவரைக் கெளரவிக்கும் வகையில் இந்த் கருத்தரங்கு நடத்தப்பட்டது.
இவர் 40 வருட கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். தென்இந்தியாவின் வரலாறு குறித்து பல புத்தகங்கள் எழுதியுள்ளார் டேவிட்.
இந்த கருத்தரங்கில்தான் தென்னகத்தில் அக்காலத்தில் நிலவிய சில தீ்ண்டாமை சம்பவங்கள் குறித்தத் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
டீ என்பது அக்காலத்தில் உழைக்கும் மக்களுக்கான பானமாகவும், காபி என்பது உயர் வகுப்பு மற்றும் உயர் நடுத்தர வகுப்பினரின் பானமாகவும் பார்க்கப்பட்டதாம். தமிழகத்தில் காபி என்று அறிமுகமானதோ அன்றே அதற்கு ஜாதி சாயமும் பூசி விட்டனராம்.
இதுகுறித்து சென்னை வளர்ச்சி கழகத்தின் பேராசிரியான ஏ.ஆர். வெங்கடாச்சலபதி கூறுகையில், காபி என்பது அக்காலத்தில் உயர் வகுப்பினருக்கான பானமாக பார்க்கப்பட்டது. குறிப்பாக நடுத்தர வர்க்க பிராமணர்களின் அடையாளமாக அது பார்க்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் கோலார் நகரில் அப்போது ஒரு சம்பவம் நடந்தது. 1927ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி கோலார் தங்க வயல் பகுதியில் ராமசாமி என்பவரும் அவரது 2 நண்பர்களும் ஒரு டீக்கடைக்குச் சென்றனர். நண்பர்களில் ஒருவர் பிராமணர். கடைக்குப் போய் 3 காபி தருமாறு கேட்டுள்ளனர்.
ராமசாமி, புத்த மதத்தைத் தழுவிய தலித் வகுப்பைச் சேர்ந்தவர். இதனால் அவருக்குக் காபி தரக் கூடாது என்று தனது ஊழியரிடம் கூறியுள்ளார் காபி ஹோட்டல் அதிபர். இதனால் ராமசாமி அங்கிருந்து வெளியேறினார். அவருடைய பிராமண நண்பரும், என் நண்பருக்கு காபி இல்லாவிட்டால் எனக்கும் தேவையில்லை என்று கூறி விட்டு அவருடன் வெளியேறி விட்டார்.
பின்னர் ராமசாமி கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிற்சங்கவாதியும், வழக்கறிஞருமான இ.எல். ஐயர் என்பவரை வைத்து நடத்தினார். ஆனால் இந்த வழக்குத் தொடர்பான ஆவணங்கள் இப்போது எங்குமே இல்லை. சில தமிழ்ச் செய்தித்தாள்களில் அன்று செய்திகள் வெளியானது மட்டுமே ஆவணமாக இருக்கிறது.
இதன் மூலம் அக்காலத்தில் காபி அருந்துவது என்பது பெரும் கெளரவமான செயலாக பார்க்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. மேலும் ஹோட்டல்களில் காபி சாப்பிட வரும் பிராமணர்களுக்காக தனி இடம் கூட ஒதுக்கியுள்ளனர். காபி ஹோட்டல்களில் அப்போது ஜாதி முக்கியமாக பார்க்கப்பட்டது. இதை எதிர்த்துத்தான் பெரியார் போராட வேண்டி வந்தது என்றார்.
ரவி ராமன் என்பவர் பேசுகையில், வெள்ளையர்கள் நமது நாட்டை ஆண்டபோது திட்டமிட்டு தீண்டாமையை வளர்த்து ஆழ வேரூண்றச் செய்தனர். குறிப்பாக தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றிய தலித் வகுப்பினரை அவர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக ஒதுக்கி வைத்து வந்தனர்.
அவர்கள் இதற்காகக் கடைப்பிடித்த பல்வேறு வகையான தீண்டாமை அடக்குமுறைச் சட்டங்களின் விஷத் தன்மையை வரலாற்றியல் நிபுணர்கள் பின்னர் வெளிக் கொணர்ந்துள்ளனர். அதேசமயம் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களும் கூட தங்களுக்கென தனிச் சட்டங்களை வைத்துக் கொண்டும் தீண்டாமையை ஊட்டி வளர்த்து வந்தனர் என்றார்.