கோவையில் ஏ.டி.எம். கொள்ளை : நாமக்கல்லில் 5 வடமாநில இளைஞர்கள் கைது
கோவை ஏ.டி.எம். கொள்ளையில் சம்பந்தப்பட்ட ஐந்து வடமாநில இளைஞர்களை நாமக்கல்லில் போலீஸார் கைது செய்துள்ளனர் .
நாமக்கல் : நாமக்கல் அருகே நடந்த வாகன சோதனையில் நிற்காமல் சென்ற காரை விரட்டிச் சென்ற போலீஸார் 5 வட மாநில இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் கடந்த 24 நாட்களாக தொடர் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதனால், இந்த சம்பவத்தில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலை நாமக்கல் அருகே உள்ள கீரம்பூர் சுங்கசாவடியில் சந்தேகத்திற்கு இடமாக வந்த வட மாநில கார் ஒன்றை போலீஸார் நிறுத்தி சோதனையிட்டனர். இதனைப் பார்த்து, அவர்களுக்கு பின்னால் வந்த இன்னொரு வடமாநில பதிவு எண் கொண்ட கார் ஒன்று நிற்காமல் சென்றது.
உடனே அதனை போலீஸார் துரத்திச் சென்று பொம்மைகுட்டை மேடு பகுதியில் மடக்கி சோதனையிட்டனர். அதிலும் 3 வட மாநில இளைஞர்கள் இருந்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், கோவையில் ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். இவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.
இதுவரை ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையடிக்க 20 பேர் தமிழகத்திற்கு வந்து உள்ளதாகவும், இவர்கள் 4 குழுக்களாக பிரிந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது. சில நாட்களுக்கு முன் கோவை ஏ.டி.எம்.மில் ரூ. 21 லட்சம் கொள்ளையடித்த கும்பல் குறித்தும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
தற்போது இவர்கள் 5 பேரும் கோவை மாவட்ட காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சேலத்திலும் பயங்கர ஆயுதங்களோடு மூன்று வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.