பாடத்திட்டத்தில் பறை இசை - 2-ம் ஆண்டாக அசத்தும் கோவை பாரதியார் பல்கலைக்கழகம்
பறை இசைக்காக ஓராண்டு பட்டயப் படிப்பை அறிமுகம் செய்து 2-வது ஆண்டாக நடைமுறைப்படுத்துகிறது கோவை பாரதியார் பல்கலைக்கழகம்.
Recommended Video
கோயமுத்தூர்: இந்திய பல்கலைக்கழக வரலாற்றில் பறை இசைக்காக ஓராண்டு பட்டயப் படிப்பை அறிமுகம் செய்து 2-வது ஆண்டாக நடைமுறைப்படுத்துகிறது கோவை பாரதியார் பல்கலைக்கழகம்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பறை இசைக்கு ஒரு படிப்பைக் கொண்டு வரும் முயற்சியில் நிமிர்வு கலையகத்தின் நிர்வாகிகள் ஈடுபட்டனர். பாடத் திட்டம் தயாரிப்பது, பல்கலைக்கழக பாடத்திட்டக் குழுவின் ஒப்புதலைப் பெறுவது என இரவு பகலாக உழைத்து இதனை சாதித்திருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு மிகவும் தாமதமாகவே மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இதனால் சொற்ப எண்ணிக்கையில்தான் மாணவர்கள் சேர்ந்தனர்.
ஆனால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு முழு வீச்சில் களம் இறங்கியுள்ளது நிமிர்வு கலையகம். இதுகுறித்துப் பேசும் எழுத்தாளர் பாமரன், மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே இசை இருந்து வருகிறது. பிறப்பில் இருந்து இறப்பு வரையில் இசையில்லாமல் யாரும் இருக்க முடியாது. மனிதர்களுக்குள் எப்படி ஏற்றத்தாழ்வுகள், பிரிவினைகள் இருக்கிறதோ அதேபோல், இசைக்குள்ளும் பிரிவினையை ஏற்படுத்திவிட்டார்கள். அப்படித்தான் பறை இசையையும் பிரித்தார்கள்.
எந்தவொரு இசைக் கருவியின் முன்பும் பறை இசை சளைத்ததல்ல. மன்னர்கள் காலத்தில் இருந்தே, தலைமைக்கு வருகிறவர் என்ன குழுவைச் சேர்ந்தவரோ அதைப் பொறுத்தே இசைக்கருவிகள் முன்னிலைப்படுத்தப்பட்டன. அப்படித்தான் பறை இசையும் ஒதுக்கப்பட்டது. இப்போது பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது' என்கிறார் நெகிழ்ச்சியுடன்.