கோவை அட்டைப் பெட்டி தொழிற்சாலையில் தீ- ரூ.55 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
கோவை: கோவையில் அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் கம்பெனி ஒன்று தீப்பிடித்த விபத்தில் ரூபாய் 55 லட்சம் மதிப்புள்ள இயந்திரங்கள், பொருட்கள் எரிந்து நாசமாகின.
கோவையை அடுத்த துடியலூர் இடிகரை அருகேயுள்ளது முத்துக்கிணறு தோட்டம். இங்கு கேரளாவைச் சேர்ந்த பிஜூ என்பவருக்கு சொந்தமான அட்டைப்பெட்டி தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இன்று அதிகாலை 3 மணி அளவில் இந்த அட்டைப்பெட்டி தயாரிப்பு கம்பெனியில் லேசாக கரும்புகை வெளியானது.
இதுகுறித்து தகவல் கிடைத்த 15 நிமிடங்களில் கோவை மண்டல தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகர் உத்தரவின் பேரில் நிலைய அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 2 தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் வெகுநேரம் போராடி தீயை அணைத்தனர். 4 மணி போராட்டத்துக்கு பின்னர் இன்று காலை 7 மணி அளவில் தான் தீயை முற்றிலுமாக அணைக்க முடிந்தது.
இந்த தீ விபத்தில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் ரூபாய் 30 லட்சம் மதிப்புள்ள எந்திரங்கள் மற்றும் தயாரித்து வைக்கப்பட்டிருந்த ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள அட்டைப் பெட்டிகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இவற்றின் மொத்த சேத மதிப்பு ரூபாய் 55 லட்சமாகும். மேலும் இந்த தீ விபத்தின் போது அட்டைப்பெட்டிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த குடோனும் பலத்த சேதமடைந்தது.
தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் என்ன என்று உடனடியாக தெரியவில்லை. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த அட்டைப்பெட்டி தயாரிப்பு கம்பெனியில் ஏராளமான தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகிறார்கள். தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லை. இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.