கோவை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன்: டி.ஐ.ஜி சஸ்பென்ட்!
கோவை: கோவை மத்தியச் சிறையில் முறைகேடுகள் நடப்பது அம்பலமானதை அடுத்து, சிறைச்சாலை டிஐஜி கோவிந்தராஜை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை மத்திய சிறையில் மொத்தம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்த சிறையில் கைதிகளுக்கு கஞ்சா, மொபைல் போன் ஆகியவை தாராளமாக கிடைப்பதாக புகார் கிளம்பியது. இது குறித்து சிபிசிஐடி குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
செல்போன், சிம்கார்டு
கைதிகளுக்கு அதிகாரிகளே செல்போன்கள், சிம்கார்டுகளை அதிகவிலைக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக சிபிசிஐடி குழுவினரின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தனி சமையலறை
சிறையில் சமைப்பதற்கான உணவு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதுடன், அல்-உம்மா அமைப்பு தொடர்புடைய கைதிகள் தனிச் சமையலறையையே நடத்தி வந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
2 கோடி வசூல்
சிறையில் தடைசெய்யப்பட்ட பொருட்களை சில கைதிகள் அதிக விலைக்கு மற்ற சிறைக்கைதிகளுக்கு விற்பனை செய்து ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து அதனை அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்வதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புகாரை விசாரித்த சி.பி.சி.ஐ.டி குழு சிறையில் பணியில் இருந்த 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்திருந்தது.
ஓய்வு பெறும் போது
இதைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறை டிஐஜி கோவிந்தராஜை தமிழக அரசு அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்துள்ளது. நாளை மறுநாள் ஓய்வு பெறவிருந்த நிலையில் கோவிந்தராஜ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.